பயங்கர தீ விபத்து: சில மணிநேம் மூடப்பட்ட ரோம் ஏர்போர்ட்- தவித்த பயணிகள்
ரோம்: இத்தாலியின் ரோம் நகரில் உள்ள பியுமிசினோ விமான நிலைய முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விமான நிலையம் சில மணிநேரம் மூடப்பட்டது.
இத்தாலியின் ரோம் நகரில் இருக்கும் பியுமிசினோ விமான நிலையத்தில் உள்ள 3வது முனையத்தில் மின்கசிவு காரணமாக புதன்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த முனையத்தில் தீ கொழுந்துவிட்டது எரிந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 5 மணிநேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.
சர்வதேச விமானங்களுக்கான அந்த முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் விமான நிலையம் சில மணிநேரம் மூடப்பட்டது. விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டபோது என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் குழம்பினர். அவர்களை தெளிவுபடுத்தும் முயற்சியில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. நேற்று விமான நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய முதல் விமானம் மதியம் 2 மணி வரை கிளம்பவில்லை. சில விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
விபத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. விமான நிலைய ஊழியர்கள் 3 பேர் புகை மண்டலத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். நள்ளிரவு விமான நிலையம் மூடப்பட்டதால் காலையில் விமானத்தில் செல்ல வந்த பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த விபத்தில் 3வது முனையத்தில் இருந்த ஷாப்பிங் பகுதி முற்றிலும் எரிந்து நாசமாகியது.