”ஐபோன்” கஸ்டமர்களின் ரகசியங்களை பாதுகாப்போம்- ஆப்பிள் சி.ஏ.ஓ டிம் குக் உறுதி
கலிபோர்னியா: ஐபோன் உபயோகிக்கும் அனைத்து பயனாளர்களின் ரகசியங்களையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகளின் ஐபோன்களை பாஸ்வேர்ட் அன்லாக் செய்து தருமாறு ஆப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்க புலனாய்வுத்துறை வேண்டுகோள் விடுத்தது.
அமெரிக்காவின் சான் பேர்னாடினோ நகரில் சயிட் ரிஸ்வான் பாருக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த டிசம்பரில் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர். அவரது ஆப்பிள் ஐபோனை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆனால், அவரது போன் ரகசிய குறியீடு மூலம் லாக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஸ்வேர்ட் நீக்கித் தரக் கோரி எப்.பி.ஐ ஆப்பிள் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்தது. ஆனால், இதற்கு ஆப்பிள் நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் அந்நிறுவனம் அரசின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இந்த நிலையில் ஐபோனின் தகவல் பாதுகாப்பு அம்சங்களை மக்கள் நம்புவதால் மக்களின் நம்பிக்கை இழக்க ஆப்பிள் நிறுவனம் விரும்பவில்லை என ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.