ரோமில் உள்ள அமெரிக்க தூதரகம், ஐ.நா. அலுவலகத்தை ரூ.8 கோடிக்கு விற்ற 4 தில்லாலங்கடிகள்
ரோம்: ரோம் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தொழில் அதிபருக்கு விற்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில் இருக்கும் அமெரிக்க தூதரகம், ஐ.நா.வின் உணவு ஏஜென்சி தலைமையகம், ஷாப்பிங் சென்டர் ஆகிய முக்கிய இடங்களை 4 பேர் கொண்ட கும்பல் திறமையாக விற்பனை செய்து ஒரு தொழில் அதிபரை ஏமாற்றியுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்தவர் உல்பாங் க்ரோல்(57). அவர் தனது உதவியாளரான டொனாட்டோ பெராஸ்ஸோலோவின் உதவியுடன் ரோம் நகரில் உள்ள போர்டா டி ரோமா ஷாப்பிங் சென்டரை ஜெர்மனியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு ரூ.2 கோடியே 69 லட்சத்திற்கு விற்றுவிட்டார். அதன் பிறகு க்ரோல், டொனாட்டோ ஆகியோர் வால்டர் பாசினி என்பவரை அரசு அதிகாரி போன்று நடிக்க வைத்துள்ளனர்.
அவர்கள் அன்னா லிசா மார்கன்டி என்பவரின் உதவியுடன் அமெரிக்க தூதரகத்தை ரூ.3 கோடியே 90 லட்சத்திற்கு அந்த தொழில் அதிபருக்கு விற்றுவிட்டனர்.
இது தவிர ஐ.நா.வின் உணவு ஏஜென்சி தலைமையகத்தை ரூ. 4 கோடிக்கு அதே தொழில் அதிபருக்கு விற்றுவிட்டனர். அந்த தொழில் அதிபர் ஏமாற்று கும்பலை நம்பி அவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.6 கோடியை அனுப்பி வைத்து ஏமாந்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.