அனிதாவுக்கு அஞ்சலி செலுத்திய ஒர்லான்டோ தமிழர்கள்... நீட் தேர்வுக்கு கடும் கண்டனம்!
அமெரிக்காவின் ஒர்லான்டோ நகரில் நீட் தேர்வு குளறுபடிகளால் இறந்த அனிதாவுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒர்லான்டோ: அமெரிக்காவின் ஒர்லான்டோ நகரில் வாழும் தமிழர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உலகமெங்கும் வாழும் தமிழர்களை நீட் தேர்வால் மருத்துவர் ஆக முடியாமல் மரணமடைந்த அனிதாவின் மரணம் பாதித்துள்ளது என்பது அங்கு நடக்கும் அஞ்சலி கூட்டங்கள் மூலம் உறுதியாகிறது. அமெரிக்காவின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள் அனிதாவின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒர்லான்டோ நகரில் கூடிய தமிழர்கள் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
குறிப்பாக, இந்தியா முழுவதும் 52 வகையான பாடத்திட்டங்களும் தேர்வுமுறையும் இருக்கும் போது, நீட் என்கிற பொதுத்தேர்வில் எப்படி அனைவரையும் சமமாக பாவிக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதேபோல், அனைத்து மாணவர்களாலும் நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புக்கு செல்வது எப்படி சாத்தியமாகும்? அதற்கு அனைவருக்கும் பொருளாதார வசதியும், பயிற்சி மையங்கள் அணுகும் தூரத்திலும் இருக்க வேண்டும். அது சாத்தியம் இல்லாத போது, நீட் தேர்வை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அனைவரும் ஒருமித்த குரலில் கோரினர்.