10 நிமிடத்தில் போக வேண்டிய உயிர் 117 நிமிடங்கள் துடித்த கொடுமை.. அமெரிக்க மரண தண்டனையால் சர்ச்சை!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு மரண தண்டனைக் குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட விஷ மருந்து வேலை செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அவர் 117 நிமிடங்கள் உயிர்ப் போராட்டம் நடத்தி மிகவும் கொடூரமாக தனது முடிவை சந்திக்க நேரிட்டது.
இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மரண தண்டனையை ஒழிக்கக் குரல் கொடுத்து வரும் அமைப்புகள், ஆர்வலர்கள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும். இப்படி ஒரு கொடூரமான முறையில் ஒருவரின் உயிரைப் பறித்த செயல் மிகவும் கொடுமையானது என்றும் அவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
அரிசோனாவில்
அரிசோனா கோர்ட் ஒன்று, ஜோசப் உட் என்பவருக்கு மரண தண்டனை கொடுத்தது. இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இதையடுத்து அரிசோனா சிறை வளாகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2 மணி நேர உயிர்ப் போராட்டம்
ஆனால் ஜோசப்புக்குப் போடப்பட்ட விஷ மருந்து வேலை செய்ய கிட்டத்தட்ட 2 மணி நேரம் எடுத்துக் கொண்டதால் அந்தக் குற்றவாளி கடுமையான உயிர்ப் போராட்டத்துக்குள்ளானார். மூச்சுத் திணறியும், கடுமையாக அவஸ்தைப்பட்டும் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரின் துடிப்பு
கிட்டத்தட்ட 117 நிமிடங்கள் ஜோசப் கடும் வலியிலும், வேதனையிலும், மூச்சுத் தினறலாலும் அவஸ்தைப்பட்டுள்ளார். ஆனால் இதை கூடியிருந்த வக்கீல்கள், சாட்சிகள், சிறை அதிகாரிகளால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.. காரணம் அது மரண தண்டனை என்பதால்.
சோதிக்கப்படாத மருந்து
அவருக்கு மரண தண்டனைக்காக மிடசோலம் மற்றும் பெயின் கில்லரான ஹைட்ரோமார்போன் ஆகியவை கலந்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்துகளை முன்பே பரிசோதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மரணத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டு விட்டது.
வழக்கமாக 10 நிமிடம்தான்
வழக்கமாக இதுபோன்ற மரண தண்டனையின்போது போடப்படும் ஊசி மருந்தால், 10 நிமிடத்தில் உயிர் போய் விடும். ஆனால் ஜோசப்புக்குப் போடப்பட்ட மருந்து சரியில்லை என்பதால் அவர் 2 மணி நேரம் துடித்துப் பின் அடங்கியுள்ளார்.
வக்கீல்கள் அதிர்ச்சி
ஜோசப்பின் வக்கீல்கள் அவரது உயிர்ப் போராட்டத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். அவரது வக்கீல் டேல் பெய்ச் தண்டனைக்குப் பின்னர் கூறுகையில் அவர் கடுமையாக மூச்சுத் திணறலுக்குள்ளானார். கடுமையான வலியால் துடித்தார். பார்க்கவே மிகவும் கொடூரமாக இருந்தது என்றார்.
உயிரைக் காக்க கோரிக்கை
ஜோசப் போராடுவதைப் பார்த்த அவரது வக்கீல்கள், உடனடியாக தண்டனையை நிறுத்தி அவரைக் காக்க முயற்சிக்குமாறும் கோரிக்கை வைக்கும் நிலையும் ஏற்பட்டது. ஆனால் சிறை அதிகாரிகள் அதை ஏற்கவில்லையாம்.
இரட்டைக் கொலை வழக்கில்
1989ம் ஆண்டு தனது காதலி டெப்பி டயட்ஸ் மற்றும் அவரது தந்தை ஜீன் ஆகியோரைக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் உட்.
குடும்பத்தினர் குமுறல்
ஜோசப்பின் உயிர்ப் போராட்டம் குறித்து அவரது சகோதரர் ஜீன் பிரவுன் கூறுகையில் இது தண்டனை அல்ல. கொலை. இப்படியா ஒரு தண்டனையை நிறைவேற்றுவது.. எனது சகோதரரை ரத்த வெள்ளத்தில் துடிக்கத் துடிக்கக் கொன்றுள்ளனர் என்றார் கோபமாக.
மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் கோபம்
இந்தத் தண்டனை குறித்து மரண தண்டனைக்கு எதிர்ப்பாக இருப்பவர்களும் குமுறல் வெளியிட்டுள்ளனர். இது தவறான தண்டனை. மரண தண்டனையை அமெரிக்க அரசு முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
640 முறை மூச்சுத் திணறல்
இந்த தண்டனையைக் காண வந்த சாட்சிகளில் ஒருவரான செய்தித் தாள் நிருபர் மைக்கேல் கீபர் என்பவர் கூறுகையில், மொத்தம் 640 முறை ஜோசப்புக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இது கொடுமையானது என்றார்.
அரிசோனா ஆளுநரும் கவலை
அரிசோனா மாகாண ஆளுநர் ஜேன் ப்ரூவர், இதுகுறித்துக் கூறுகையில் மரண தண்டனைக்கான காலம் அதிகமாகியிருப்பது கவலை தருகிறது. இதுகுறித்து விசாரிக்கப்படும் என்றார். அதேசமயம், ஜோசப் சட்டப்பூர்வமாகவே தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். அதில் சட்டவிரோதம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் 26வது மரண தண்டனை
இந்த தண்டனையானது அமெரிக்காவின் 26வது மரண தண்டனையாகும். அதேசமயம், அரிசோனாவில் கடந்த அக்டோபர் மாதத்துக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட முதல் தண்டனை இது.