குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க பாக். அனுமதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் நாளை சந்திக்க பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
பாகிஸ்தானில் உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் 2016-ல் குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017-ல் குல்பூஷனுக்கு மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனுத் தாக்கல் செய்தது. இம்மனு மீது விசாரணை நடத்திய சர்வதேச நீதிமன்றம் கடந்த ஜூலை 17-ல் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன்.... நெகிழும் தந்தை குமரி அனந்தன்!
அதில், குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் சர்வதேச ஒப்பந்தங்களின் படியான சட்ட உரிமைகளை குல்பூஷனுக்கு அளிக்கவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்படுவதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.