திப்பு சுல்தான் அணிந்திருந்த மதநல்லிணக்க "ராமர்" மோதிரம் லண்டனில் ஏலம்!
லண்டன்: மைசூரை ஆண்ட திப்புசுல்தான் அணிந்திருந்த மதநல்லிணக்க அடையாள சின்னமான "ராமர்" உருவம் பொறித்த மோதிரம் லண்டனில் ஏலம் விடப்பட்டுள்ளது.
கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் மைசூரை ஆண்ட மாமன்னன் ஹைதர் அலி. அவரது வாரிசான திப்பு சுல்தான் கி.பி. 1782ஆம் ஆண்டு மைசூர் சுல்தானாக முடிசூடினார்.
மன்னர் திப்பு சுல்தான் இஸ்லாமியராக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருந்தனர். இதனால் திப்பு சுல்தானின் ஆட்சிக்காலம் மதநல்லிணக்க பொற்காலமாக வரலாற்றில் போற்றப்படுகிறது.
அதனாலேயே திப்பு சுல்தான் தன் கைவிரல்களில் இந்து கடவுளான ராமர் உருவம் பொறித்த மோதிரத்தை அணிந்திருந்தார். மைசூரை 17 ஆண்டுகாலம் ஆட்சி செய்த திப்பு சுல்தான் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் படையுடன் மோதிக் கொண்டிருந்தார்.
கி.பி. 1799ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த இறுதிப் போரில் மாவீரன் திப்பு சுல்தான் வீரமரணமடைந்தார். அப்போது திப்புவின் கையில் இருந்த இந்த ராமர் மோதிரம் கிழக்கிந்திய படை தளபதியான ஆர்தர் வெல்லெஸ்லியால் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மோதிரத்தில் ராமரின் பெயர், தேவநாகரி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இது 41.2 கிராம் எடையுள்ளது. இந்த மோதிரத்தை லண்டனில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் நேற்று ஏலம் விட்டது.
இம் மோதிரம் சுமார் ரூ1.40 கோடிக்கு ஏலம் போயுள்ளது. ஏலம் எடுத்தவர் யார் என்பதை இந்நிறுவனம் வெளியிடவில்லை.
தகவல்- படங்கள் பிபிசி தமிழோசை