வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த திருடன்... இதுக்குப் பேர் தான் விதியா?
போலீசில் இருந்து தப்பிய திருடன் லிப்ட் கேட்டு மீண்டும் போலீசிடமே சிக்கிய சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
பிராங்க்போர்ட்: போலீசாரிடம் இருந்து தப்பிய திருடன் ஒருவன், இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு போலீசிடமே லிப்ட் கேட்டு மாட்டிய விவகாரம் கெண்டுகியில் நடந்துள்ளது.
கெண்டுகியில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஆலன் லெவிஸ் என்ற நபர். சம்பவத்தன்று அவரை கிரீன் அப் தடுப்பு மையத்திற்கு மாற்றுவதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது தனது கையில் உள்ள காப்பு மிகவும் இறுக்கமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஆலன்.
இதனால் அதனை சற்று தளர்த்திவிட முயற்சித்துள்ளார் காவலர். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஆலன், அங்கிருந்து தப்பினார். அவரைப் போலீசார் துரத்தினர்.
அப்போது அந்த சாலையில் வந்த வாகனங்களில் லிப்ட் கேட்டுள்ளார் ஆலன். அதில் ஒரு வாகனம் மட்டும் இவருக்காக நின்றுள்ளது. ஆனால், அந்த வாகனத்தை ஓட்டி வந்ததும் ஒரு போலீஸ்தான் என்பது ஆலனுக்கு தெரியவில்லை. ஆலனின் கையில் இருந்த கைவிலங்கைப் பார்த்து சுதாரித்த அந்நபர், அவரை வளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததால், தற்போது ஆலனின் தண்டனைக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.