டென்மார்க் ஏர்போர்ட்டில் கிடந்த ‘மர்ம’ பார்சல்... வெடிகுண்டு பீதியால் பரபரப்பு
கோபன்ஹேகன்: கோபன்ஹேகன் விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பார்சலில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டதால், அங்கிருந்த மக்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் விமான நிலையத்தின் 3வது புறப்பாடு அருகே நேற்று மர்மபார்சல் ஒன்று கிடப்பதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப் பட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த மர்மபொருள் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
கடந்தவாரம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தவர். அதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ள நகரங்கள் உள்ள பட்டியலில் கோபன்ஹெகன் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அந்நகரின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோபன்ஹெகன் விமான நிலையத்தில் மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.