உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 37 லட்சத்தை தாண்டியது- அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 72,256
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,355 பேர் பலியானதால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 72,256 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
உலக நாடுகளில் கொரோனாவின் கோரத்தாண்டவம் ஓய்ந்தபாடில்லை. உலக நாடுகளிலேயே அமெரிக்காதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் நேற்று மட்டும் 24,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,37,466 ஆக அதிகரித்தது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,335 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 72,256 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலி, இங்கிலாந்தில் கொரோனாவால் நிகழ்ந்த மரணங்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை எட்டுகிறது. இங்கிலாந்தில் 29,427 பேரும் இத்தாலியில் 29,315 பேரும் கொரோனாவால் மரணித்துள்ளனர். பிரான்ஸ், ஸ்பெயினில் கொரோனா உயிரிழப்புகள் 25 ஆயிரத்தைதாண்டியது.
ஸ்பெயினில் 25,613 பேரும் பிரான்ஸில் 25,531 பேரும் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். பிரேசிலில் 7,921; ஜெர்மனியில் 6,993; ஈரானில் 6,340; பெல்ஜியத்தில் 8,016 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர்.
உலக நாடுகளில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,24,350. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,58,012. அதேநேரத்தில் கொரோனா பாதித்து அதில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 12,39,908 ஆகும்.