சீனாவில் நடக்கும் அதிசயம்.. திடீரென்று குறையும் கொரோனா வேகம்.. எப்படி நடந்தது?.. பின்னணி இதுதான்!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது அந்நாட்டில் வேகம் குறைந்து வருகிறது.
பெய்ஜிங்: சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது அந்நாட்டில் வேகம் குறைந்து வருகிறது. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அந்நாட்டில் வைரஸ் பரவும் வேகம் குறைகிறது. இதற்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது.
Recommended Video
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வருகிறது. முதலில் மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் இந்த வைரஸ் பரவி வந்தது. இந்த வைரஸ் கொரோனா வைரஸ் எனப்படும் வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது ஆகும்.
இந்த குடும்பத்தில் மொத்தம் 6 வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் குடும்பத்தின் 7 வது வைரஸ் ஆகும். இந்த வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் உருவானது .
எல்லோருக்கும் மரணம்
கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் அவர்களுக்கு பல அடிப்படை பிரச்சனைகள் ஏற்படும். ஒருவரை பார்த்தால் அவர்களுக்கு கொரோனோ வைரஸ் தாக்குதல்தானா என்று முதலில் சொல்ல முடியாது. சீனாவின் உஹன் பகுதியில்தான் முதலில் இது தாக்கப்பட்டது. அங்கு இருக்கும் மீன் மார்க்கெட்டில் இது உருவாகி இருக்கலாம்.ஆனால் இதுவும் கூட உறுதியாக சொல்லப்படவில்லை.
மிக அதிகம்
கொரோனா வைரஸ் குறித்து அதிகம் தெரிந்த நாடு என்றால் அது சீனாதான். முக்கியமாக சீனாவில் இருக்கும் ஹூபேய் மாகாணம்தான் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களில் 83% இங்குதான் இருக்கிறார்கள். இந்த நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. அந்த நகரத்தில் உள்ளவர்களில் 45% பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
வேகமாக குறைகிறது
ஆனால் சீனாவில் தற்போது வைரஸ் பரவுவது குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தற்போது அந்நாட்டில் வேகம் குறைந்து வருகிறது. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அந்நாட்டில் வைரஸ் பரவும் வேகம் குறைகிறது. தினமும் 400, 500 பேர் என்று பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக 70-120 பேர் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்.இதற்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது.
மற்ற நாடுகள்
உலகில் மற்ற நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது. முக்கியமாக தென் கொரியா, இத்தாலி, ஈரானில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 82 நாடுகளில் இந்த வைரஸ் பரவியது. சீனாவிற்கு வெளியே இந்த வைரஸ் வேகம் எடுத்து இருக்கிறது. மெக்சிகோவில் இந்த வைரஸ் பரவி உள்ளது. ஜப்பான், சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்பெயின், தாய்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவி உள்ளது.
எப்படி சீனா
சீனாவில் வேகமும் குறைய என்ன காரணம் என்று உலக சுகாதார மையத்தின் மூத்த மருத்துவ ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். அதன்படி சீன மிக அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அங்கு மொத்தமாக வுஹன், ஹூபேய் இரண்டும் மூடப்பட்டது. மற்ற நாடுகளில் இப்படி செய்ய முடியாது. போருக்கு இணையாக மொத்தமாக நகரத்தை மூடினார்கள்.
வேகமாக குணப்படுத்தியது
அங்கு பள்ளிகள், அரசு அலுவலகங்கள், ஐடி நிறுவனங்கள் எல்லாம் தொழிற்சாலையாக மாற்றப்பட்டது. சீனாவின் மற்ற பகுதிகளில் இருக்கும் எல்லா மருத்துவர்களும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டார்கள். சீனாவின் வுஹன் நகரத்திற்கு ரயிலில் மருத்துவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். மருத்துவர்களும் தாமாக முன்வந்து சிகிச்சை அளித்தார்கள். இதனால் ஹுபையேயில் மட்டும்தான் வைரஸ் பரவியது.
மற்ற பகுதிகள்
இதனால் சீனாவில் 30 மாகாணங்கள் காப்பாற்றப்பட்டது. அங்கு எல்லா நிகழ்வும் தடை செய்யப்பட்டது. மக்கள் யாருமே வெளியே அனுமதிக்கப்படவில்லை. பல நாடுகளில் இருந்து மருந்து பொருட்கள் இறக்கப்பட்டது. மிக வேகமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிசிடிவி மூலம் மக்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டார்கள். டிரோன்கள் மூலம் மக்கள் தீவிரமாக தூரத்தில் இருந்து கூட கண்காணிக்கப்பட்டார்கள்.
அனைத்தையும் பயன்படுத்தியது
முக்கியமாக சீனா மற்ற நாடுகள் போல மனித உரிமை பற்றி கவலைப்படவில்லை. நோய் பாதித்தவர்களை அடுத்த நொடி யோசிக்காமல் கைது செய்து அழைத்து சென்றனர். இதற்காக ராணுவம் இறக்கப்பட்டது. நோய் குறித்த தகவல்களை தெரிவிக்க உளவுத்துறை பயன்படுத்தப்பட்டது. அரசு தனது மொத்த சக்தியையும் பயன்படுத்தியது. இதுதான் அங்கு வைரஸை கட்டுப்படுத்த காரணம்.
பெரிய அளவில் கஷ்டம்
இத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் அங்கு வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்தது. மக்கள் உள்ளே இருந்ததால் புதிதாக யாருக்கும் வைரஸ் பரவவில்லை . பரவிய நபர்கள் மட்டும்தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் இதை மற்ற நாடுகளில் செயல்படுத்த வாய்ப்பு குறைவு. மற்ற நாடுகளில் இது போன்ற தீவிர செயல்பாடுகளை செய்வது கடினம் என்கிறார்கள்.