ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் இருக்காம்... புது குண்டை தூக்கிப்போடும் சீனா!
பீஜிங்: சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.
அதே வேளையில் ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் யாருக்கும் இதுவரை வைரஸ் பாதித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் சீனா கூறியுள்ளது.
இந்த ஐஸ்கிரீம்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டு, ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சீனாதான் முதற்காரணம்
உலகில் முதன் முதலில் கொரோனா வைரஸ் ஏற்பட காரணமாக இருந்ததே சீனாதான். அங்குள்ள வுஹானில் முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்டு மற்ற நாடுகளுக்கு பரவியது. இதனால்தான் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீனாவை குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா புதிய குண்டை தூக்கி போட்டுள்ளது. கிழக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுளளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கின் அருகில் தியான்ஜினில் உள்ள தாகியோடாவ் ஃபுட் கோ நிறுவனத்தில் இந்த ஐஸ்கிரீம்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
1,600 பேருக்கு பரிசோதனை
அந்த நிறுவனத்தில் இருந்து சுமார் 4,836 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனம் சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் 1,600 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 700 ஊழியர்களின் சோதனை முடிவுகள் நெகடிவாக உள்ளன.
வாடிக்கையாளர்கள் யார்?
ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும், அந்த நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தொகுப்பில் உள்ள 29,000 அட்டைப்பெட்டிகளில் பெரும்பாலானவை இன்னும் விற்கப்படவில்லை என்று சீன அரசு தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தில் ஐஸ்கிரீம் வாங்கிய வாடிக்கையாளர்களை சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.
நியூசிலாந்திலிருந்து பால் பவுடர்
அவர்களது சுகாதார விவரங்களை சமர்ப்பிக்குமாறு நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களில் நியூசிலாந்திலிருந்து பால் பவுடர் மற்றும் உக்ரைனிலிருந்து மோர் தூள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன என்றும் கூறப்பட்டுளள்து.