ஹேக்கிங் மர்மம்.. கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா உருவாக்கியது எப்படி? தொடங்கியது "வேக்சின் வார்"!
மாஸ்கோ: கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கிவிட்டதாக ரஷ்யா கூறி வரும் நிலையில், அதற்கான காப்புரிமையை பெற்று உள்ளது. இந்த நிலையில் ரஷ்யா எப்படி இவ்வளவு வேகமாக கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்தது என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.
Recommended Video
ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து தற்போது மனித சோதனை 1 மற்றும் 2ஐ முடித்துள்ளது. தற்போது மனித சோதனை மூன்று வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடக்க உள்ளது. அதற்கு முன் மக்களின் பயன்பாட்டிற்கு இந்த மருந்து வர இருக்கிறது.
ஆம் இரண்டு சோதனைகளை வெற்றிகரமாக முடித்த காரணத்தால் மூன்றாவது சோதனை செய்யும் முன்பே மனிதர்கள் பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பு மருந்தை விட ரஷ்யா முடிவு செய்துள்ளது. அந்நாட்டு விதிமுறை இதற்கு அனுமதி அளிப்பதால் ரஷ்யா இந்த மருந்தை இன்னும் இரண்டு வாரங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது.
சந்தேகம் வந்தது
கொரோனா தடுப்பு மருந்து சோதனையை ரஷ்யா மே மாதம் தொடக்கத்தில் தான் செய்தது. ஆனால் எப்படி ஜூன் மாதம் பாதியில் மருந்தை உருவாக்கி, மனித சோதனை அளவிற்கு சென்று அதில் வெற்றியும் பெற்றது என்று கேள்வி எழுந்தது. ஒரு மருந்தை உருவாக்கி, அதை ஆய்வக சோதனை, மிருக சோதனை செய்ய 4 மாதமாவது ஆகும்.அதன்பின் குறைந்தது 3 மாதம் மனித சோதனை செய்ய வேண்டும் என்ற நிலையில், ரஷ்யா எப்படி தடுப்பு மருந்தை உருவாக்கியது என்று கேள்வி எழுந்தது.
ஹேக்கிங் கேள்வி
அப்போதுதான் ரஷ்யா மீது ஹேக்கிங் புகார்கள் வைக்கப்பட்டது. ரஷ்யா பிற நாடுகளின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனைகளை ஹேக்கிங் செய்து. அதன்பின் தனது மருந்தை உருவாக்கி உள்ளது. இதனால்தான் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா இவ்வளவு வேகமாக உருவாக்கி உள்ளது என்று புகார் எழுந்தது. முக்கியமாக இங்கிலாந்து இந்த புகாரை ரஷ்யா மீது வைத்தது.
ஆக்ஸ்போர்ட்
ரஷ்யா மீது இங்கிலாந்து இந்த புகாரை வைக்க முக்கியமான காரணம் இருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தற்போது கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் இறுதி கட்டத்தில் இருக்கிறது. . ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த மருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்த மருந்தின் தகவலை ரஷ்யா திருடி இருக்குமோ என்று இங்கிலாந்து சந்தேகம் கொள்கிறது.
எப்படி செய்யும் ஹேக்கிங்?
ரஷ்யா இதை எப்படி ஹேக் செய்து இருக்கும் என்றும் இங்கிலாந்து வல்லுநர்கள் கூறுகிறார்கள். தங்கள் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி குறித்த விவரங்களை இங்கிலாந்தில் இருக்கும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி இருக்கிறோம். இதன் வேதி மூலக்கூறுகள் குறித்த விவரங்கள் எங்கள் கணினியில் உள்ளது. இதை ரஷ்யா தங்கள் ஹேக்கர்கள் மூலம் திருடி இருக்கலாம் என்று இங்கிலாந்து சந்தேகம் கொண்டு உள்ளது.
மறுப்பு தெரிவித்துவிட்டது
ஆனால் இதற்கு ரஷ்யா நேரடியாக மறுப்பு தெரிவித்துவிட்டது. ரஷ்யா தெரிவித்துள்ள கருத்தில், இந்த மருந்துக்கு நாங்கள் காப்புரிமை வாங்கி இருக்கிறோம். ஆனால் பிற நாடுகள் எங்களிடம் பணம் கொடுத்து இதை உற்பத்தி செய்யலாம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இதை நாங்கள் சுயமாக உருவாக்கி இருக்கிறோம். மற்ற நாடுகளில் உள்ள தொழில்நுட்பத்திற்கும், எங்கள் தடுப்பு மருந்து தொழில்நுட்பத்திற்கு நிறைய வேறுபாடு உள்ளது, நாங்கள் எதையும் ஹேக் செய்யவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
உறுதியாக மறுக்கிறது
ஆனால் இதை இங்கிலாந்து உறுதியாக மறுத்துள்ளது. ரஷ்யா இதை கண்டிப்பாக ஹேக் செய்து திருடி இருக்கலாம் என்று சந்தேகம் கொள்கிறது. இங்கிலாந்தின் இந்த சந்தேகத்திற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.
1. ஒரு தடுப்பு மருந்தை இவ்வளவு வேகமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது (அது ரஷ்யாவாகவே இருந்தாலும்)
2. இங்கிலாந்து , இந்தியா, சீனா போல மருந்து உற்பத்தியில் ரஷ்யா பெரிய நாடு எல்லாம் கிடையாது.
3. ரஷ்யா ஆராய்ச்சியை தொடங்கியதே லேட், ஆனால் எப்படி இவ்வளவு வேகமாக மருந்து உற்பத்திசெய்ய முடிந்தது?
4. ஆக்ஸ்போர்ட் மருந்து போலவே ரஷ்யாவின் மருந்தும் இருக்க வாய்ப்புள்ளதால் இது ஹேக் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
ரஷ்யாவில் என்னமோ நடக்கிறது
இதற்கு தற்போது ரஷ்யா காப்புரிமையும் வாங்கி இருப்பது நிறைய சந்தேகங்களை எழுப்பி உள்ளது. மருந்து உற்பத்தியை வைத்து உலக நாடுகளை தங்கள் பக்கம் கொண்டு வர ரஷ்யா நினைக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது உலகம் முழுக்க நாங்கள் மருந்தை கொடுக்கிறோம், நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று ரஷ்யா சொல்ல திட்டமிடுகிறதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.