கொரோனா சப்ளை செய்த ரூபி பிரின்சஸ்.. கதிகலங்கிய ஆஸி.. மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்.. சிக்கியது ஆதாரம்!
சிட்னி : கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய போது ஆஸ்திரேலியா சிறப்பாக அதை கையாண்டது. ஆனால், அவர்களின் நடவடிக்கைகளில் பெரிய ஓட்டையை போட்டது ஒரு சொகுசுக் கப்பல்.
Recommended Video
ஆம், ரூபி பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலில் இருந்து 2,700 பேர் எந்த வித பரிசோதனையும் இன்றி ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அந்த மாபெரும் தவறால் ஆஸ்திரேலியாவில் 600 கொரோனா வைரஸ் நோயாளிகள் புதிதாக உருவாகினர். மேலும், 15 பேர் வரை அந்த கப்பலில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.
உடல்நலம் குன்றிய பயணிகள்
தெற்கு சிட்னி நகரில் உள்ள கெம்ப்லா துறைமுகத்தில் மார்ச் மாத துவக்கத்தில் ரூபி பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பல் ஒரு பயணத்தை முடித்து விட்டு வந்து சேர்ந்தது. அடுத்த பயணத்துக்கு அந்த கப்பல் தயாராகி வந்தது. அதே சமயம், மார்ச் 8 அன்று அந்த கப்பலில் 158 உடல்நலம் குன்றிய பயணிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அனுமதி வழங்கப்பட்டது
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும், குறிப்பாக நாடு விட்டு நாடு பயணம் செய்பவர்கள் மூலம் பரவி வரும் நிலையில், அந்த பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு இருக்க வேண்டும். அல்லது அந்த கப்பலையே தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். ஆனாலும், ஒன்பது பேருக்கு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை "நெகடிவ்" ஆக வந்ததால் அடுத்த சுற்று பயணத்துக்கு பயணிகளை அனுமதித்து உள்ளனர்.
பயணம் திடீர் ரத்து
நியூசிலாந்துக்கு செல்லவிருந்த அந்த கப்பலில் 2,700 பேர் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின் அந்தக் கப்பல் பயணத்தை ரத்து செய்துள்ளது. அதற்கு காரணம் உடல்நலம் குன்றி இருக்கும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் தான் என்ற உண்மையை மறைத்து, வானிலை சரியில்லை எனக் கூறி உள்ளனர்.
நாட்டுக்குள் செல்ல அனுமதி
கப்பலில் பயணம் செய்ய ஏறிய 2,700 பயணிகளும் மார்ச் 19 அன்று ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். யாருக்கும் எந்த பரிசோதனையும் செய்யப்படவில்லை. அதன் பின் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் திடீர் ஏற்றம் இருந்தது.
பீதி கிளப்பியது
விசாரணையில் ரூபி பிரின்சஸ் கப்பலில் ஏறி, இறங்கியவர்கள் மற்றும் அவர்கள் மூலமாக மட்டும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பீதி ஏற்பட்டது.
விசாரணை துவக்கம்
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பிரிவு காவல்துறையினர் பாதுகாப்பு கவசங்களுடன் சிட்னி துறைமுகத்தில் நின்று இருந்த ரூபி பிரின்சஸ் கப்பலுக்குள் விசாரணை செய்ய சென்றுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி தெரிந்தும் எப்படி 2,700 பேர் கப்பலில் ஏறி, இறங்க அனுமதிக்கப்பட்டனர் என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
பரிசோதனை
காவல்துறையினர் 10 நாட்களுக்கு அந்த கப்பலிலேயே தங்கி விசாரணை செய்ய உள்ளனர். அந்த கப்பலில் தற்போது 50 நாடுகளை சேர்ந்த 1,040 ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அவர்களில் சுமார் 200 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிளாக் பாக்ஸ்
இந்த விசாரணையில் முக்கிய திருப்பமாக கப்பலின் பிளாக் பாக்ஸை கைப்பற்றி உள்ளது நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை. அதன் மூலம், உண்மையில் கப்பலில் என்ன நடந்தது என்ற உண்மை வெளி உலகுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரங்கள்
கப்பலின் கேப்டன் உரிய ஒத்துழைப்பு அளிப்பதாகவும், கப்பலில் இருக்கும் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் அதிலேயே தங்கி இருக்க விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். பிளாக் பாக்ஸ் தவிர வேறு சில ஆதாரங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
ஆஸ்திரேலியா நம்பிக்கை
ஆஸ்திரேலியா இந்த கப்பலால் கொரோனா வைரஸ் பாதிப்பில் பின்தங்கினாலும், கடந்த சில நாட்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 96 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். மார்ச் 28 அன்று மட்டும் 458 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.