கொரோனா தடுப்பு மருந்து...முந்திக் கொண்டதா ரஷ்யா... இந்தியா பேச்சுவார்த்தை!!
மாஸ்கோ: கொரோனா தடுப்பு மருந்து குறித்து இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் பேசி வருவதாக அந்த நாட்டின் நேரடி முதலீட்டு நிதியகத்தின் கிரில் டிமிதிரிவ் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம்தான் அந்த நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க நிதியுதவி அளித்து வருகிறது. இந்த தகவலை அந்த நாட்டின் டிவிக்கு அளித்த பேட்டியில் கிரில் தெரிவித்துள்ளார்.
டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ''ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பது குறித்து எங்களது நட்பு நாடுகள் அதிக அக்கறை எடுத்து விசாரித்து வருகின்றன. குறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் சில நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. 20க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தடுப்பு மருந்து குறித்து எங்களுடன் தொடர்பு கொண்டு கேட்டு வருகிறது. இந்த மருந்து தயாரிக்க 5 நாடுகள் எங்களுடன் தீவிரமாக இணைந்து வேலை செய்து வருகின்றன'' என்றார்.
சீனாவுடன் எல்லையில் பதற்றமான நிலை.. இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்க முன்வந்துள்ள சூப்பர் ஆயுதம்!
ரஷ்ய துணை பிரதமர் தத்யானா கோலிகோவா கூறுகையில், ''ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கீழ் வரும் தொற்று நோய் மற்றும் நுண்ணுயிருக்கான கமாலியா தேசிய ஆராய்ச்சி மையம் கொரோனா தடுப்பு கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து தயாரிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்கும். அரசின் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி பிரிவு மேலும் ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தின் தயாரிப்பு அக்டோபர் மாதத்தில் இருந்து துவங்கும்'' என்றார்.
கொரோனா தடுப்பு மருந்து மீதான ஆய்வை ரஷ்யா முழுவதுமாக இன்னும் முடிக்கவில்லை. இரண்டு கட்ட மனித பரிசோதனைகள் மட்டுமே முடித்த நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனையை முடிக்கவில்லை. ஆதலால் அவசர கதியில் கொண்டு வரப்படும் இந்த மருந்தின் நம்பகத்தன்மை எந்தளவிற்கு இருக்கும் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மருத்துவ ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.