இத்தாலியை மயானபூமியாக்கும் கொரோனா-ஒரே நாளில் 651 பேர் பலி.. உயிரிழப்பு எண்ணிக்கை 5,476 ஆக அதிகரிப்பு
ரோம்: கொரொனா தொற்றுநோயால் இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் கொரோனாவின் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
கொரோனாவின் தாக்குதல் சீனாவைவிட இத்தாலியில் படுஉக்கிரமாக இருக்கிறது .இத்தாலியின் தெருக்கள் எங்கும் கொரோனாவால் உயிரிழந்தோர் சடலங்கள்.. இவற்றை மொத்தமாக எரியூட்டுவதா? புதைப்பதா? என தெரியாமல் விழிபிதுங்கி கிடக்கிறது அந்த தேசம்.
அத்துடன் இல்லாமல் ஒவ்வொரு நாளும் இடைவிடாமல் அதிகரிக்கும் மரணங்கள்... இதனால் ஒட்டுமொத்த இத்தாலி நாடும் உருக்குலைந்து போயுள்ளது. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 651 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,476 ஆக அதிகரித்துள்ளது.
வெளியே வராதீர்கள்.. டெல்லி உட்பட நாடு முழுக்க 13 மாநிலங்களில் மொத்தமாக லாக் டவுன்.. கொரோனா ஆட்டம்!
அமெரிக்காவில் 389 பேர் பலி
இதேபோல் அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க் மாகாணத்தில்தான் அதிகபட்சமாக 114 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வாஷிங்டனில் 94 பேரும் கலிபோர்னியாவில் 28 பேரும் மாண்டுபோயுள்ளனர். அமெரிக்கா முழுவதும் சுமார் 30,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பிரான்சில் ஒரே நாளில் 112 பேர் பலி
பிரான்சிலும் கொரோனாவின் உக்கிர தாண்டவம் அதிகரித்து வருகிறது. பிரான்சில் ஒரே நாளில் 112 பேர் பலியான நிலையில் இங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 674 ஆக அதிகரித்திருக்கிறது. பிரான்ஸில் மொத்தம் 16,018 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
துருக்கியில் 30 பேர் பலி
துருக்கியில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த அனைவருமே முதியவர்கள் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். துருக்கியில் கடந்த 24 மணிநேரத்தில் 289 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டிருக்கிறது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,000.
செளதியில் 119 பேர் பாதிப்பு
செளதியில் கொரோனாவால் மேலும் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செளதியில் இதுவரை கொரோனாவுக்கு 511 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பஹ்ரைனில் கொரோனாவின் தாக்குதலுக்கு 2வதாக நேற்று ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஜெர்மனியில் கொரோனாவை தடுக்கும் வகையில் 2 பேருக்கு மேல் சந்திப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. கனடாவில் கொரோனாவால் ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் முதலாவதாக நேற்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்.