அதிகரிக்கும் கொரோனா.. சொன்னதெல்லாம் பொய்யா கோப்பால்... ஜப்பான் மாடல் பெயிலாப் போச்சு!
டோக்கியோ: ஜப்பானில் துவக்கத்தில் கொரோனா வைரஸ் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த நாட்டின் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவி இருப்பது அந்த நாட்டை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
துவக்கத்தில் பரிசோதனையை அதிகப்படுத்தி கொரோனா தொற்றை கட்டுக்குள் ஜப்பான் வைத்து இருந்தது. பொது முடக்கமும் அமலில் இல்லை. இதை ஜப்பான் மாடல் என்று உலக நாடுகள் புகழ்ந்தன. நாட்டின் கலாச்சார, பண்பாட்டு நிலை கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளது என்று அந்த நாட்டின் நிதியமைச்சரும் அறிவித்து இருந்தார்.
ஜப்பானில் தற்போது 39,113 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 25,906 பேர் மீண்டுள்ளனர். 1,013 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் இளைஞர்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. தற்போது அதிகளவில் முதியவர்களுக்கு தொற்று ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. உலகிலேயே முதியவர்கள் அதிகமாக இருக்கும் நாடு ஜப்பான்.
மற்ற ஆசிய நாடுகளில் வேகமாக கொரோனா தொற்று பரவிக் கொண்டு இருக்கும்போது, பொருளாதாரம் குறித்து ஜப்பான் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தது. ஆனால், தற்போது மற்ற நாடுகள் நார்மலுக்கு வரும்போது, ஜப்பானில் தற்போது அதிகரித்து வருகிறது. முதலில் நாட்டில் வைரஸ் பரவல் ஏற்பட்டு இருக்கும்போது, கட்டுப்படுத்த எமர்ஜென்சியை அந்த அரசு அறிவித்து இருந்தது. ஆனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று கட்டாயப்படுத்தவில்லை. வர்த்தகம் மூட வேண்டும் என்று அறிவிக்கவில்லை. இது மே மாதம் வரை நீடித்தது. இதன் பின்னர் ஜூன் மாதம் உணவகங்கள், பார்கள், பேஸ்பால், சுமோ குத்துச்சண்டை ஆகியவை வழக்கம்போல் இயங்கின.
ஜப்பான் நாடு அவசரப்பட்டு பொது முடக்கத்தை தளர்வு செய்தது தவறு என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வியட்நாம், ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற நாடுகள் முதல் தொற்றுக்குப் பின்னர் இரண்டாம் தொற்றுக்கு தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற நாடுகள் உடனடியாக செயல்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தன. பரிசோதனை மேற்கொண்டது, தனிமைப்படுத்தியது என்று விரைவாக செயல்பட்டன. ஆனால், ஜப்பான் தாமதமாக அனைத்து முடிவுகளையும் எடுத்தது என்று வல்லுநர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
அது என்ன நீல நிறத்தில்.. அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்திருக்கும் அட்டை.. ஜப்பான் மேட்.. இதான் காரணம்!
காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவும், சளி, தும்மல் மூலமும் பரவும் என்பதை மேற்கத்திய நாடுகளை விட ஜப்பான் நன்றாக அறிந்து வைத்து இருந்தது என்றாலும், தனி மனிதரை கட்டுப்படுத்த தவறிவிட்டது. ஆனால், மக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிந்து வருகின்றனர்.