மலேசியாவில் சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள்.. பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் காரணமாக மலேசியாவில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சனிக்கிழமை வெவ்வேறு விடுதிகள் மற்றும் ஹோட்டல்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. எந்தவொரு தென்கிழக்கு ஆசிய நாட்டிலும் இல்லாத மிக உயர்ந்த எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பரவி இருப்பது மலேசியாவில் தான். இங்கு 900 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
இதனால் அச்சம் அடைந்த இந்தியர்கள் அங்கிருந்து இந்தியாவிற்கு நாடு திரும்ப விரும்பினார்கள். ஆனால் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கும் விமானங்கள் இயக்கம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால நாடு திரும்ப முடியாமல் அச்சத்துடன் இந்தியர்கள் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மலேசியாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பாதுகாப்பாக ( விடுதி மற்றும் ஓட்டல்களில்) இடங்களில் தங்க வைத்துள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்திய தூதரகம்,இந்திய பயணிகளுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கி வருகிறது. மலேசியாவில் தற்போது வெளிநாடுகளுக்கு செல்வதற்கும், வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க அந்நாட்டு காவல்துறையும், ராணுவமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் 164 நாடுகளில் இதுவரை 308609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 13071 பேர் மரணம் அடைந்துள்ளனர். 95834 பேர் குணம் அடைந்துள்ளனர்.