உண்மையை சொல்லுங்க.. எத்தனை பேர் இறந்தார்கள்? கொரோனாவால் வெடித்த கலகம்.. சிக்கலில் ஸ்பெயின் அரசு!
மாட்ரிட் : ஸ்பெயின் நாடு கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே அரசியல் கலகம் வெடிக்கத் துவங்கி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆளும் அரசுக்கு முதலில் முழு ஆதரவு அளித்து வந்த எதிர்கட்சிகள், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போவதை அடுத்து கடும் விமர்சனம் செய்து வருகின்றன.
ஏற்கனவே, பலி எண்ணிக்கை 15,000த்தை தாண்டி உள்ள நிலையில், உண்மையான பலி எண்ணிக்கையை என கேட்டு எதிர்கட்சிகள் போர்க் கொடி தூக்கி உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் பாதிப்பு
கொரோனா வைரஸ் சீனாவை அடுத்து ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதித்தது. தற்போது அமெரிக்கா மோசமான நிலையில் இருந்தாலும், மக்கள் தொகை அளவில் சிறிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் இத்தாலி துவக்கத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்டது.
ஸ்பெயின் பாதிப்பு அதிகம்
கடந்த சில நாட்களாக இத்தாலி ஓரளவு சமாளித்து கொரோனா வைரஸ் பாதிப்பு பரவும் வேகத்தை குறைத்துள்ளது. ஆனால், ஸ்பெயின் நாட்டில் தொடர்ந்து புதியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிக் கொண்டே செல்கிறது. இறப்பு எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. அங்கே இதுவரை 15,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
அதிக பலி எண்ணிக்கை
இத்தாலியில் 17,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸுக்கு பலியாகி இருந்தாலும், மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே அதிக அளவில் கொரோனா வைரஸுக்கு பலியானது ஸ்பெயின் நாட்டில் தான். இந்த நிலையில், அந்த நாட்டில் மூன்றாவது முறையாக ஏப்ரல் 26 வரை அவசர நிலை நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் விமர்சனம்
இரண்டு முறை அவசர நிலை அறிவித்தும் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான ஆளும் அரசால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன. அரசின் நடவடிக்கைகள் சரியான முறையில் இல்லை என்றும், அரசு வெளியே சொல்லும் தகவல்கள் உண்மை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை
தற்போது அங்கே இடது சாரி கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2015இல் இருந்து ஸ்பெயினில் நான்கு முறை தேசிய அளவிலான தேர்தல் நடைபெற்று விட்டது. அப்படி ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நாட்டில், கொரோனா வைரஸ் எனும் தொற்று நோய் பரவும் வேளையில் அரசியல் கலகம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவசர நிலை தீர்வு இல்லை
ஸ்பெயின் நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியான பாப்புலர் பார்ட்டியின் தலைவர் பாப்லோ கசாடோ தன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். முதல் முறை அவசர நிலை அறிவிக்கப்பட்ட போது நீங்கள் தனியாக இல்லை என்றேன், இரண்டாவது முறை, எதுவும் நன்றாக போகவில்லை என்றேன், இன்று (மூன்றாவது அவசர நிலை அறிவிப்புக்கு பின்) இது அதற்கான வழி இல்லை என கூறும் நிலையில் இருக்கிறேன் என கூறி உள்ளார்.
உண்மையை சொல்லுங்க
மேலும், ஆளும் அரசு இந்த மோசமான காலகட்டத்தை சரியாக கையாளவில்லை என்றும், பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்றும், உண்மையான கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கையை வெளியிடுமாறும் கடும் விமர்சனங்களால் துளைத்து வருகிறார் பாப்லோ. மற்ற எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றன.
திட்டம் இல்லை
எதிர்க் கட்சியான வோக்ஸ் பார்ட்டியின் தலைவர் சாண்டியாகோ அபாஸ்கல் அரசு தவறான விஷயத்தை பரப்பி வருவதாகவும், ஊடகங்களுக்கு லஞ்சம் அளித்து அதை செய்வதாகவும் பகிரங்க குற்றச்சாட்டு வைத்து ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். கொரோனா வைரஸ் அபாயத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டை காக்க உங்களிடம் எந்த திட்டமும் இல்லை எனவும் அவர் ஆளும் கூட்டணியை தாக்கிப் பேசி உள்ளார்.
பிரதமர் தப்பிக்க முயற்சி
இதற்கு பதில் சொல்ல வேண்டிய ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஐரோப்பிய யூனியன் சரியாக செயல்படவில்லை என அதன் மீது பழியை போட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாவது ஒருபுறம், பொருளாதாரம் சிதைந்து வருவது ஒருபுறம் என மோசமான நிலையில் இருக்கும் ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் அந்த நாடு மோசமான நிலையை அடையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
நல்ல விஷயம்
இத்தனை மோசமான விஷயங்களுக்கு இடையில் ஒரே ஒரு நல்ல விஷயமாக, ஸ்பெயின் நாட்டில் 52,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் குணமடைந்து இருப்பது மருத்துவர்கள் இடையே நம்பிக்கையை அளித்துள்ளது. அதை அரசியல்வாதிகள் குழப்பாமல் இருக்க வேண்டும் என்பதே இப்போதைய தேவை.