"தேவதை".. செல்வத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து.. கொரோனா நோயாளிகளுக்காக.. அத்தனையும் துறந்து.. செம!
கொரோனா ஒழிப்பு பணியில் களம் இறங்கியுள்ளார் ஸ்வீடன் இளவரசி சோபியா
ஸ்டாக்ஹோம்: வறுமையை பார்த்ததில்லை.. பசியை அறிந்தது இல்லை.. பட்டினியை உணர்ந்தது இல்லை.. செல்வ செழிப்பில் பிறந்து வளர்ந்தவர் ஸ்வீடன் நாட்டு இளவரசி.. இப்போது கொரோனா ஒழிப்பு களப்பணியில் குதித்துள்ளார்.. படாடோபங்கள், ஆடம்பரங்கள், அலங்காரங்களை தூக்கி எறிந்து, சாதாரணமாக நர்ஸ் அணியும் புளூ கலர் யூனிபார்ம் அணிந்து ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதித்தவர்களுக்காக தீவிரமாக சேவை செய்து வருகிறார்!!
உலகை உலுக்கும் இந்த வைரஸுக்கு ஸ்வீடன் நாட்டில் இதுவரை 12,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்... 1,300க்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.. தற்போது கொரோனாவால் நேரடியாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முன்வந்துள்ளார் அந்நாட்டின் இளவரசி!!
இவர் பெயர் சோபியா.. 35 வயதாகிறது.. இளவரசி நினைத்திருந்தால் காசு தந்திருக்க முடியும், சாப்பாடு போதும் என்ற அளவுக்கு தந்திருக்க முடியும்.. நலத்திட்டங்களை அறிவித்திருக்க முடியும்.. ஆனால் கொரோனாவுக்கு இதெல்லாம் தீர்வு இல்லை... பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த அளவு உதவ வேண்டும் என்பதே இவரது எண்ணமாக இருந்தது.
அதனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவ நினைத்தார்.. ஆனால் எந்த விஷயத்தையும் அரைகுறையாக தெரிந்து கொண்டு ஈடுபட சோபியா விரும்பவில்லை.. அதனால் 3 நாட்கள் ஆன்லைனில் பயிற்சி முடித்தார்.. பிறகு அந்நாட்டுத் தலைநகரில் உள்ள சோபியாஹெமெட் ஆஸ்பத்திரியில் தொண்டு செய்ய ஆரம்பித்தார்.
ஆஸ்பத்திரியில் ஆன்லைன் பாடத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.. இங்குதான் இவர் பணியில் சேர்ந்துள்ளார்.. அசிஸ்டெண்ட் வேலைதான்.. சுகாதார உதவியாளர் பணி... இந்த பணியை பொறுத்தவரை நேரடியாக கொரோனா நோயாளிகளை கையாள்வதில் இவரை ஆஸ்பத்திரி நிர்வாகம் ஈடுபடுத்தாது.. மாறாக டாக்டர்கள் அல்லது சுகாதார பணியாளர்களுக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தி கொள்ளும்.
இந்த ஆன்லைன் பாடத்தில் சுகாதாரம்தான் முக்கியமான விஷயம்.. சுத்தம் செய்தல், கிச்சனில் வேலை செய்தல், பொருட்கள், கருவிகளில் உள்ள கிருமிகளை நீக்குவது இப்படி பல பயிற்சிகள் இந்த பாடத்தில் உள்ளன.. இந்த பயிற்சி முடித்தவர்கள்தான் ஆஸ்பத்திரிக்கு உதவமுடியும்.. அந்த வகையில் ஆஸ்பத்திரியில் இந்த பயிற்சி தரப்பட்டு வருகிறது.. வாரத்திற்கு 80 பேர் வீதத்தில் ஆஸ்பத்திரியில் இந்த பயிற்சியை தன்னார்வலர்களுக்கு வழங்கி வருகிறது.
வேலைக்கு சேர்ந்த முதல்நாளில் சோபியா யூனிபார்முடன் சக பணியாளர்களுடன் போட்டோ எடுத்து கொண்டார்.. புளூ ஆஸ்பத்திரியின் கலர் யூனிபார்ம் அது.. அந்த போட்டோவில் பணியாளர்கள் அனைவரும் நிற்கிறார்கள்.. ஆனால் சமூக விலகலை கடைப்பிடித்து தூர தூரமாக நிற்கிறார்கள்.. இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அரசன் முதல் ஆண்டி வரை பேதம் பாராமல் கொன்று வரும் கொரோனா நிறைய பாடங்களை மனிதர்களுக்கு தினந்தோறும் கற்று தருகிறது.. அதில் ஒன்றுதான் மனிதம்!! கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ பேர் உலகின் பல மூலை முடுக்குகளில் உதவிகளை செய்து வருகின்றனர்.. அவர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்தான்.. இளவரசி சோபியா போல நம்மூரிலும் யாராவது இறங்கி இப்படி வேலை பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!!!