உலக மேப்பில் இருந்தே அழிக்க நினைத்த அமெரிக்கா.. கொரோனா மாஸ்க் தந்து உதவிய வியட்நாம்.. நெகிழ்ச்சி!
அமெரிக்காவிற்கு கொரோனா மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உடைகளை அனுப்பி வியட்நாம் அரசு உதவி செய்து இருக்கிறது.
ஹனோய்: அமெரிக்காவிற்கு கொரோனா மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உடைகளை அனுப்பி வியட்நாம் அரசு உதவி செய்து இருக்கிறது. வியட்நாம் நாட்டின் இந்த செயலை உலக நாடுகள் பாராட்ட தொடங்கி உள்ளது.
Recommended Video
அமெரிக்கா தற்போது உலகம் முழுக்க மருத்துவ உபகரணங்களுக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகளிடம் அமெரிக்கா மருத்துவ உதவிகளை கேட்க தொடங்கி உள்ளது. மிக மோசமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கு உதவி கேட்பதைவிட வேறு வழியில்லை.
இதனால் உலகம் முழுக்க இருக்கும் நாடுகளிடம் உதவி கேட்பதும், சில நாடுகளிடம் அடித்து பிடுங்குவதையும் அமெரிக்கா செய்து வருகிறது. அமெரிக்காவிற்கு கொரோனாவிற்கு எதிரான மாஸ்க், பாதுகாப்பு உடைகள், கிளவுஸ், கண்ணாடிகள், மருந்துகள் அதிக தேவையாக மாறியுள்ளது.
வியட்னாம் உதவியது
உலக நாடுகளிடம் இப்படி அமெரிக்கா உதவி கேட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் ஒரு குட்டி நாடு அமெரிக்காவிற்கு தாமாக முன்வந்து உதவி செய்து உள்ளது. வெறும் 10 கோடி மக்கள் மட்டுமே இருக்கும். பொருளாதாரத்தில் பல ஆசிய நாடுகளை விட மிக மோசமான பொருளாதாரம் கொண்டு இருக்கும் வியட்நாம்தான் அந்த நாடு. ஆம், அமெரிக்காவிற்கு ஒரு காலத்தில் எதிரியாக இருந்த வியட்நாம் தற்போது அமெரிக்காவிற்கு உதவி உள்ளது.
மாஸ்க்குகளை அனுப்பியது
அதன்படி முதற்கட்டமாக கடந்த 9ம் தேதி 5 லட்சம் மாஸ்குகளையும், பாதுகாப்பு உடைகளையும் வியட்நாம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது. மருத்துவ பொருட்கள் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அமெரிக்காவிற்கு வியட்நாம் மிக சரியான நேரத்தில் உதவி செய்துள்ளது. இந்த வார இறுதியில் இன்னும் கூடுதலாக 4.5 லட்சம் மாஸ்குகள் மற்றும் பாதுகாப்பு உடைகளை அனுப்ப வியட்நாம் முடிவு செய்து, அதன் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது.
அதிபர் டிரம்ப் கருத்து
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்தில், வியட்நாம் நாட்டில் இருந்து எங்களுக்கு 5 லட்சம் மாஸ்குகள், பாதுகாப்பு உடைகள் வந்துள்ளது. எங்களுக்கு சரியான நேரத்தில் உதவிய வியட்நாம் அரசுக்கு நன்றி. வியட்நாம் நாட்டில் இருக்கும் இரண்டு முக்கியமான அமெரிக்க நிறுவனங்களுக்கும் நன்றி. உங்களால்தான் இந்த பணிகள் சாத்தியம் ஆகியுள்ளது. வியட்நாம் நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வேகமாக செய்தது
வியட்நாம் இதில் செய்த சாதனை என்னவென்றால் சீனாவை விட மிக குறைந்த விலையில் வியட்நாம் இந்த பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதே சமயம் சீனாவை விட தரமான வகையில் வியட்நாம் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. பொதுவாக இது போன்ற பொருட்களை ஆர்டர் செய்தால் 30 நாள் கழித்தே சீனா டெலிவரி செய்யும். ஆனால் வியட்நாம் வெறும் 10 நாட்களில் அமெரிக்காவிற்கு இதை ஏற்றுமதி செய்துள்ளது.
அண்டை நாடுகளுக்கு உதவி
அதேபோல் அண்டை நாடுகளுக்கும் வியட்நாம் உதவி செய்துள்ளது. சீனா, கம்போடியா ஆகிய நாடுகளுக்கும் மருந்து பொருட்களை கடந்த மாதம் வியட்நாம் ஏற்றுமதி செய்தது. வியட்நாம் நாட்டின் பண மதிப்பு இந்தியாவை விட 300% குறைவாகும். அதேபோல் அதன் பொருளாதாரம் அமெரிக்காவில் இருக்கும் மாகாணமான கலிபோர்னியாவை விட சிறியது ஆகும். இப்படி இருந்தும் வியட்நாம் அமெரிக்காவிற்கு உதவி உள்ளது.
நெகிழ்ச்சி சம்பவம்
அமெரிக்காவிற்கு வியட்நாம் உதவுகிறது. இதில் நெகிழ்ச்சியான சம்பவம் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். இதே அமெரிக்காதான் ஒரு காலத்தில் வியட்நாம் நாட்டின் பாதி பகுதியை உலக வரைபடத்தில் இருந்தே நீக்க முயன்றது. 1 நவம்பர் 1955 - 30 ஏப்ரல் 1975 வரை தெற்கு வியாட்நாமிற்கும், வடக்கு வியாட்நாமிற்கும் இடையில் மிக கடுமையான போர் நடந்தது. இந்த போரில் தீவிரமாக ஈடுபட்ட நாடுதான் அமெரிக்கா .
தோல்வியும் உதவியும்
தெற்கு வியட்நாமை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தீவிரமாக ஆதரித்தது. அதே சமயம் வடக்கு வியட்நாமை சீனா, ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகள் தீவிரமாக ஆதரித்தது. இந்த யுத்தத்தில் கடைசியில் வென்றது வடக்கு வியட்நாம். வலிமையான விமானப்படை, டாங்கிகள், துப்பாக்கிகளை வைத்து இருந்த அமெரிக்காவை வடக்கு வியட்நாம் மிக எளிதாக வென்றது. பழமையான ஆயுதம், கொரில்லா தாக்குதல் உதவியுடன் வியட்நாம் இந்த வெற்றியை ருசித்தது.
இத்தனை வருடம்
அதன்பின் 1995ல் இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் மூலம் ஒன்றாக நட்பானது. அமெரிக்காவில் நிறைய வியட்நாம் மக்கள் படிக்கிறார்கள். பணியாற்றுகிறார்கள். இருந்தாலும் அமெரிக்காவின் நெருங்கிய நண்பன் என்ற பட்டியலில் எப்போதும் வியட்நாம் இருந்தது இல்லை. ஆனால் இப்போதுதான் மிக சரியான நேரத்தில் செய்த உதவி மூலம் அமெரிக்கா - வியட்நாம் நட்பு புதிய உயரத்தை தொட்டுள்ளது.
வியட்நாம் வென்றது
இன்னொரு பக்கம் வியட்நாம் மற்ற நாடுகளுக்கு உதவினாலும் தங்கள் நாட்டில் கொரோனாவை மிக எளிதாக வென்றுள்ளது. அங்கு 266 பேருக்கு மட்டுமே கொரோனா தாக்கியது. அதில் 169 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 97 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். யாருமே அங்கு கொரோனா காரணமாக பலியாகவில்லை. உள்நாட்டில் கொரோனாவை வென்றதோடு, வெளிநாட்டிற்கு வியட்நாம் உதவ தொடங்கியுள்ளது.