ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.. ஏவுகணை சோதனையில் கிம் ஜோங் "பிசி".. வடகொரியாவில் என்ன நடக்கிறது?
கொரோனா காரணமாக இதுவரை தங்கள் நாட்டில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
பியோங்யாங்: கொரோனா காரணமாக இதுவரை தங்கள் நாட்டில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. உலக நாடுகளை இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே சமயம் பலருக்கு இது சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது.
உலகம் மொத்தத்தையும் கிட்டத்தட்ட கொரோனா புரட்டிப்போட்டு விட்டது. முக்கியமாக உலகின் வல்லரசு நாடுகள் என்று கருதப்பட்ட சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகள் இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்காவில் மட்டும் 215,357 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுக்க 9.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கடைசியில் பழங்குடிகளையும் விட்டுவைக்கவில்லை.. அமேசான் காட்டிற்கும் சென்ற கொரோனா.. எப்படி வந்தது?
ஒருவருக்கு கூட கொரோனா இல்லை
உலகமே இப்படி திணறிக்கொண்டு இருக்கும் போது வடகொரியா மட்டும் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் யாருக்கும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. எங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை.இதுவரை கொரோனா அறிகுறியோடு யாரும் அனுமதி ஆகவில்லை. அதேபோல் கொரோனா நோயாளிகள் யாரும் வெளிநாட்டில் இருந்து எங்கள் நாட்டிற்குள் வரவில்லை என்று வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
எப்படி செய்தது
வடகொரியாவில் இப்படி கொரோனா இல்லாமல் இருக்க நிறைய காரணங்கள் உள்ளது. அங்கு கொரோனாவிற்கு எதிராக வடகொரியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஜனவரி 5ம் தேதியே வடகொரியா தங்கள் எல்லைகளை மூடிவிட்டது. அதோடு தங்கள் நாட்டில் இருந்து யாரும் வெளியேற கூடாது என்று உத்தரவிட்டது. சீனாவுடன் மொத்தமாக ஏற்றுமதி இறக்குமதியை நிறுத்திக் கொண்டது.
அனைத்திற்கும் தடை
அதேபோல் வெளிநாட்டு வாழ் மக்கள் தங்கள் நாட்டில் இருந்தால் அவர்களை உடனே வெளியேற்றியது. டிசம்பருக்கு பின் தங்கள் நாட்டிற்குள் வந்த எல்லோரையும் வடகொரியா வெளியேற்றியது. எல்லையில் கள்ளத்தனமாக நாட்டிற்குள் நுழையும் எல்லோரையும் கண்டுபிடித்து மொத்தமாக எல்லைகளை சீல் வைத்தது. மிக தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் அந்நாட்டு அரசு, மொத்தமாக தனி நாடாக, தங்களை தனியாக வைத்துக் கொண்டது .
வடகொரியாவின் அச்சம்
கொரோனா வைரஸ் வடகொரியாவில் பரவாமல் இருக்க இதுதான் காரணம் என்று கூறுகிறார்கள். வடகொரியா இப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இன்னொரு காரணமும் இருக்கிறது. தொடர் பொருளாதார தடை மற்றும் அமெரிக்காவுடனான சண்டை காரணமாக வடகொரியா மருத்துவ துறையில் முன்னேற்றம் அடையவே இல்லை. அங்கு போதிய மருந்துகள், மருத்துவர்கள் இல்லை. கொரோனா வந்தால் அங்கே தப்பிப்பது கஷ்டம். இதனால்தான் அங்கே கொரோனாவை நுழைய விடாமல் வடகொரியா தீவிரமாக முயன்று வருகிறது.
எல்லோரையும் எல்லையிலேயே தடுக்கிறார்கள்
அமெரிக்கா விதித்த மருந்து ஏற்றுமதிக்கான பொருளாதார தடைகள் இன்னும் இருக்கிறது. அங்கு மருந்துகள் இன்னும் ஏற்றுமதி செய்யப்படுவது இல்லை. உலக சுகாதார மையம் அவ்வப்போது இங்கே மருந்துகளை அனுப்பும். மற்ற எல்லாம் மருந்தும் உள் நாட்டு உற்பத்திதான். இதனால் தற்போது அங்கு எல்லையிலேயே கொரோனாவை நுழைய விடாமல் தீவிரமாக அந்நாட்டு அரசு கட்டுப்படுத்தி வருகிறது.
அண்டை நாட்டிற்கு வந்தது
அருகிலேயே இருக்கும் சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. தென் கொரியாவில் கொரோனாவால் 9,478 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 4811 பேர் அங்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை மொத்தம் 144 பேர் அங்கு பலியாகி உள்ளனர். கொரோனாவிற்கு எதிராக போராட்டத்தில் தென் கொரியா கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிபெற்று வருகிறது.
தீவிர ஏவுகணை சோதனை
தென் கொரியா வரை கொரோனா வந்தாலும் கூட வட கொரியா இதனால் பாதிப்பு அடையவில்லை. உலகமே கொரோனாவால் பதறி வரும் போது வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் ஜாலியாக எப்போதும் போல ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறார். அங்கு கடந்த வாரம் கூட இரண்டு ஏவுகணை சோதனை நடந்தது. 300 கிமீ மற்றும் 250 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்து வெற்றிபெற்றது.
நிறைய சந்தேகம்
உலக நாடுகளை இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே சமயம் பலருக்கு இது சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது. தங்கள் நாட்டில் கொரோனா வந்தும் கூட வடகொரியா இதை மறைக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. வடகொரியாவில் ஏற்கனவே 250 பேர் பலியாகிவிட்டனர். இதில் ராணுவ வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் சில தெரிவித்து வருகிறது. அதேபோல் அங்கு 10 ஆயிரம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே இது போல செய்துள்ளது
தூதரக அதிகாரிகள் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வடகொரியாவில் கொரோனா உள்ளது என்றம் சிலர் அங்கே எழுதி வருகிறார்கள். ஆனால் அதை அரசு மறைக்கிறது. இந்த அரசு இதற்கு முன் இப்படி பல விஷயங்களை உலகின் பார்வையில் இருந்து மறைத்துள்ளது. இப்போதும் அப்படித்தான் செய்கிறது. அந்த நாட்டிற்கு இதெல்லாம் எளிதான விஷயம் என்று கூறுகிறார்கள்.