ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ் மனைவிக்கு கொரோனா வைரஸ்.. சோதனையில் உறுதி
மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சேஸ் மனைவி பெகோனா கோமஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பிரச்சனையில் இருந்து சீனா இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் ஐரோப்பா கண்டத்திலும், சீனாவின் அண்டை நாடுகளிலும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒட்டுமொத்த இத்தாலியும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்துடன் அதன் அண்டை நாடான ஸ்பெயினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், தென்கொரியா, ஈரான் , அமெரிக்கா போன்ற நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. உலகமே கொரோனா என்ற கொள்ளை நோயால் அச்சத்தில் தவித்து வருகிறது.
பெகோனா கோமஸ்
ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சேஸ் மனைவி பெகோனா கோமஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது.இந்த தகவலை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெகோனா கோம்ஸ் மற்றும் பிரதமர் பெட்ரோ சான்சேஸ் உடல்நிலை ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மாட்ரிட்டில் உள்ள லா மாங்க்லோவா அரண்மனையில் உள்ள தங்களது இல்லத்தில் மருத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முறையாக அவர்கள் பின்பற்றி வருவதாகவும் ஸ்பெயின் அரசு கூறியுள்ளது.
கொரோனா வைரஸ்
பெட்ரோ சான்சேஸின் அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதும், தொடர்ந்து சிகிச்சை பெற்றுவதையும் ஸ்பெயின் அரசு உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், அதை எதிர்த்து போராடுவதற்காக ஸ்பெயின் அரசு, இரண்டு வார காலத்திற்கு நாட்டில் தேசிய அவசர நிலையை பிறப்பித்துள்ளது. அதன்படி உணவகங்கள் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ மனைவி
ஏற்கனவே கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஈரானிலும் சில முக்கிய அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் வேகம்
கொரோனாவால் உலக அளவில் 1,42 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 5393 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை நிலவரப்படி ஒரே நாளில் 1484 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.