இனி ஆகாயத்திலேயே ”பெட்ரோல் பங்க்”- விமானங்களுக்காக விஞ்ஞானிகள் ”அசத்தல்” கண்டுபிடிப்பு
லண்டன்: விமானங்கள் இனி கீழே இறங்காமல், வானிலேயே எரிபொருளை நிரப்பிக்கொள்ளும் வகையிலான புதிய கண்டுபிடிப்பு சாதனையை நிகழ்த்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.
நீண்ட தூரம் செல்லும் விமானங்கள், ஒரு சில விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காகவே இறங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அந்த குறையை போக்க புதிய ஆய்வில் மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆகாய விமான எரிபொருள் போக்குவரத்து திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
வானிலேயே எரிபொருள்:
அதன்படி ஒரு விமானத்தில் எரிபொருள் மட்டும் நிரப்பப்பட்டிருக்கும். அந்த எரிபொருளைக் கொண்டு 5 விமானங்கள் வானில் பறக்கும் போதே பெட்ரோலை நிரப்பிக் கொள்ள முடியும்.
சாத்தியமான சிமுலேஷன்:
இப்படி வானிலேயே எரிபொருளை நிரப்பிக் கொள்வது என்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது என சிமுலேஷன் நிரூபித்துள்ளதாக கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.
ஜூரிச் முதல் சிட்னி வரை:
இப்படி வானிலேயே எரிபொருளை நிரப்பி, இம்முறையில் ஜூரிச்சில் இருந்து சிட்னிக்கு எங்கும் நிற்காமல் விமானம் பயணித்து இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நான்கில் ஒரு பங்கு மிச்சம்:
இம்முறை மூலம் பயணிகள் விமானமானது நான்கில் ஒரு பங்கு பெட்ரோலை மிச்சப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆக இனி ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு நான் ஸ்டாப்பாக விமானங்கள் பறக்கலாம்.
9 நிறுவன விஞ்ஞானிகள்:
ஐரோப்பாவை சேர்ந்த 9 நிறுவனங்களின் விஞ்ஞானிகளின் கூட்டுக்குழு க்ரூய்சர் - பீடர் கருத்தாக்க முறையில் நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் இந்த புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
முக்கிய இடங்களில் எரிபொருள்:
இந்த அமைப்பில் 5 பயணிகள் விமானத்துக்கு தேவையான எரிபொருளை நிரப்பிய விமானமானது, விமானங்கள் பறக்கும் பாதையில் பல்வேறு முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும்.
டேக் ஆப் செய்து பயணம்:
பயணிகள் விமானத்திலிருந்து எரிபொருள் தேவைக்கான அழைப்பு வரும் பட்சத்தில் எரிபொருள் நிரப்பப்பட்ட விமானமானது, தான் நிறுத்தப்பட்டுள்ள இடத்திலிருந்து டேக் ஆப் செய்து பயணிகள் விமானத்துக்கு கீழே பறக்கும்.
பம்ப் மூலம் நிரப்பப்படும்:
பின்னர் அந்த விமானத்தில் இருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எரிபொருள் டேங்கிலிருந்து பம்ப் மூலம் பயணிகள் விமானத்திற்கு தேவையான எரிபொருளை நிரப்பும்.
இதுவே முதல் முறை:
அதன்பின் பயணிகள் விமானத்துடனான தொடர்பை முறித்துக்கொண்டு எரிபொருள் நிரப்பிய விமானம் பத்திரமாக தரையிறங்கும். இம்முறை ஏற்கனவே ராணுவ துறையால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தற்போது தான் பயணிகள் விமானத்தில் இம்முறை பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
நிரப்புவது எல்லாம் சரிதான்.. எங்கேயும் விழாமல் பத்திரமாக கொண்டு வந்து இறக்கி விட்டால் போதும்...!