பீச் மணலை பாட்டிலில் சேகரித்த சுற்றுலாபயணிகள்.. 6 ஆண்டு சிறை, ரூ. 2.5 லட்சம் அபராதம்?
ரோம்: இத்தாலிய கடற்கரையில் மணலை பாட்டிலில் எடுத்துச் சென்ற குற்றத்திற்காக இரண்டு சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலியின் சர்தீனியா தீவில் உள்ள கடற்கரைகளில் வெள்ளை மணல் காணப்படுகிறது. மிகவும் மென்மையாகவும், பொன்னிறமாகவும் இருக்கும் இந்த மணல் சுற்றுலா பயணிகள் பெரிதும் கவரும் வகையில் உள்ளது. எனவே, இங்கு சுற்றுலா வருபவர்கள் பாட்டிலில் மணலை அள்ளிச் செல்ல ஆரம்பித்தனர். இதனால், அங்குள்ள கடற்கரைகள் அழிவு பாதையை நோக்கி செல்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
ஆகவே, கடற்கரைகளைக் காப்பாற்றும் பொருட்டு, அங்கு மணலை எடுத்துச் செல்வது குற்றமாக அறிவிக்கப்பட்டது. அதனை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறை தண்டனையும் அளிக்கும் சட்டம் அங்கு அமல் படுத்தப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள்
இந்நிலையில், பிரான்சை சேர்ந்த ஒரு இளம் தம்பதி சமீபத்தில் சர்தீனியா தீவுக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள கடற்கரைகளைச் சுற்றிப் பார்த்த பின்னர், அவர்கள் திரும்ப படகு ஏறுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் அவர்களது காரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் சோதனை செய்தனர்.
மணல் திருட்டு
அதில், அத்தம்பதியின் காரில் இருந்து 14 பிளாஸ்டிக் பாட்டில்களில் கடற்கரை மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 40 கிலோ எடைகொண்ட கடற்கரை மணலை அத்தம்பதி திருடிச் செல்ல முயற்சித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கடற்கரை மணலை திருடியதாக அத்தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
விளக்கம்
இந்த வழக்கு விசாரணை அங்குள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையில், ‘கடற்கரை மணலை எடுத்துச் செல்வது சட்டத்துக்குப்புறம்பான செயல் என்பது தங்களுக்கு தெரியாது என்றும், சுற்றுலா வந்ததன் நினைவாக கடற்கரை மணலை எடுத்து செல்ல முயன்றதாகவும்' அந்தத் தம்பதி கூறியுள்ளனர்.
போலீஸ் வாதம்
ஆனால், நினைவாக எடுத்துச் செல்ல நினைப்பவர்கள் இப்படி 14 பாட்டிலிலா மணலை எடுத்துச் செல்வர் என்பது போலீசாரின் வாதமாக உள்ளது. ஆகவே அவர்கள் கடற்கரை மணலைக் கடத்தும் விதமாக அத்தனை பாட்டில்களில் எடுத்துச் சென்றுள்ளனர் என நீதிமன்றத்தில் அவர்கள் வாதாடி வருகின்றனர்.
சிறை தண்டனை
விசாரணையின் முடிவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 3000 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்) அபராதமும், 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அத்தம்பதிக்கு விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.