சிங்கங்களை கொன்று பின்னால் அமர்ந்து லிப் லாக் செய்த ஜோடி- கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
சிங்கத்தை வேட்டையாடிவிட்டு அந்த வெற்றிக்களிப்போடு இறந்த சிங்கத்தின் பின்னால் அமர்ந்து முத்தமிட்டுக்கொண்ட ஜோடியை சமூக வலைத்தளங்களில் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
கேப்டவுன்: விலங்குகளை வேட்டையாடும் போட்டியில் பங்கேற்ற கனடாவைச் சேர்ந்த இளம் தம்பதி, தாங்கள் வேட்டையாடிய சிங்கத்தின் பின்னால் அமர்ந்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து வெற்றியை கொண்டாடியுள்ளனர். அதை புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். அந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்ஸ் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். சிங்கத்தை வேட்டையாடிய இவர்களை யார் வேட்டையாடப்போகிறார்களோ என்றும் கேட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் கலஹாரி பாலைவனத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக சபாரி எனப்படும் காட்டுச் சுற்றுலா மற்றும் மிருகங்களை வேட்டையாடுதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கனடாவை சேர்ந்த தம்பதிகள் டேரன் மற்றும் கார்லோன் கார்ட்டர் என்ற ஜோடி பங்கேற்று சிங்கம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. அதோடு விட்டிருக்கலாம். அதை பெருமையாக படம் எடுத்து அந்த போட்டோவை சுற்றுலா நிறுவனமான லெகிலிலா தனது சமூக வலைத்தள பங்கங்களில் பதிவேற்றம் செய்தது அப்படி புகைப்படம் போட்டதில்தான் சிக்கல் வந்தது. இந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விலங்குகள் ஆர்வலர்கள் தங்களின் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
விலங்குகள் வேட்டை
நம் நாட்டில் மன்னர்கள் காலத்தில் வேட்டைக்கு செல்வார்கள். பொழுது போக்கிற்காக வேட்டைக்குப் போய் மான், காட்டெருமை, சில சமயங்களில் சிங்கம், புலியை கூட வேட்டையாடி பெருமையாக அரண்மனையில் மாட்டி வைப்பார்கள். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வேட்டைக்குப் போனது நினைவுக்கு வந்தால் அதற்கு சமூகம் பொறுப்பல்ல. மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் வீரப்பன்கள் வந்தார்கள் விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடினார்கள்.
அனுமதியோடு வேட்டை
நம்நாட்டில்தான் விலங்குகள் வேட்டையாடப்படுவது சட்ட விரோதம் வெளிநாடுகளில் சட்ட அனுமதியோடு வேட்டையாடுகின்றனர். அப்படித்தான்
தென்னாப்பிரிக்க நாட்டில், விலங்குகளை பொழுதுபோக்கிற்காக வேட்டையாடுவதற்கு என்றே அதற்கான ஏற்பாடுகளை செய்து தர பல நிறுவனங்கள் உள்ளன. அங்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் வேட்டையாட தேவையான துப்பாக்கிகளுக்கான உரிமம் பெற்று தருவது மற்றும் ஆயுதங்கள் வழங்குவது உள்ளிட்ட வசதிகளை இந்நிறுவனங்கள் செய்து தருகின்றன.
|
கலஹாரி பாலைவனம்
ஆப்பிரிக்க கண்டத்தின் தென் பகுதியில் சுமார் 9,00,000 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த பாலைவனம் கலஹாரி. இங்கு சிங்கம், புலி, யானை என அனைத்து வகை காட்டு மிருகங்களும் வசிக்கின்றன. காட்டு விலங்குகளைப் பார்ப்பதற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். காட்டுப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் சஃபாரி போன்றவற்றுக்கும் சுற்றுலா நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்றன.
|
விலங்குகள் உறுப்புகள்
இந்த பாலைவனத்தில் உள்ள சிறிய ரக குரங்குகளில் இருந்து சிங்கங்கள், நீர்யானைகள் போன்ற பெரிய ரக விலங்குகள் வரை வேட்டையாடப்படுகின்றன. பொழுதுபோக்கிற்காக ஒவ்வொரு வருடமும் ஆயிரம் சிங்கங்கள் கொல்லப்படுகின்றன. கடந்த 10 வருடங்களில் 2 ஆயிரத்து 500 விலங்கு உறுப்புகள் இங்கிலாந்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
சிங்கத்தை வேட்டையாடி போட்டோ
கலஹாரி பாலைவனத்துக்கு சுற்றுலா சென்ற கனடாவைச் சேர்ந்த இளம்ஜோடியான டேரன், கார்லோன் கார்ட்டர் வேட்டையாடும் போட்டி ஒன்றில் பங்கேற்றனர். அங்கு சிங்கம் ஒன்றை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியுள்ளனர். வேட்டையாடப்பட்ட சிங்கத்தின் உடலுக்கு பின்னே அமர்ந்துக் கொண்டு இருவரும் லிப்லாக் செய்து கொண்டனர். இறந்த சிங்கத்துடன் தனியாகவும் ஜோடியாகவும் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
|
வேண்டாம் வேட்டை
அந்தப் புகைப்படங்களை சுற்றுலா நிறுவனமான லெகிலிலா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அந்தப் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் #StopLionHunting, #StopTrophyHunting என ஹேஷ்டாகுகளை உருவாக்கி புகைப்படத்தினை பகிர்ந்து வருகின்றனர். நெட்டிசன்களின் எதிர்ப்பு வலுவடைந்ததை அடுத்து அந்த புகைப்படங்களை நீங்கியதோடு தனது சமூகவலைத்தள பக்கத்தையே அந்த சுற்றுலா நிறுவனம் முடக்கியுள்ளது. எதற்கு இந்த வேண்டாத வேலை என்கின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள்.