சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் விடுதலை செய்யப்பட்டார்.. 2 மாத சிறை வாழ்க்கை முடிந்தது
சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.
ரியாத்: சவுதி அரேபியாவில் கடந்த சில நாட்களாக அரசியல் சீர் திருத்தங்கள் நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் அங்கு இருக்கும் இளவரசர்களுக்கும் முடி இளவரசருக்கும் இடையில் பிரச்சனையும் நடைபெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன் கூட 11 சவுதி இளவரசர்கள் அங்கு போராட்டம் செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார்கள். அதேபோல் அங்கு சினிமா தியேட்டர் திறப்பது, பெண்களுக்கு லைசன்ஸ் கொடுப்பது என நல்ல மாற்றங்களும் நடந்து வருகிறது.
தற்போது சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். இவர் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டு தவறு என்று கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டனர்
சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அங்கு இருக்கும் முக்கிய அதிகாரிகளின் வீட்டில் சொத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்று சோதனை நடத்தினார். பல்வேறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
அல்வாலீத் பின் தலால் கைது
இதில் சவுதியின் முக்கியமான பணக்காரரும், இளவரசருமான அல்வாலீத் பின் தலால் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பண மோசடி செய்ததாகவும், நாட்டின் பொருளாதரத்தை சிதைத்ததாகவும் கூறப்பட்டது.
வெளியேவந்தார்
தற்போது இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. இவர் கடந்த 2 மாதமாக சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இவர் மீண்டும் அவருடைய இளவர அங்கீகாரத்தை தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சர்ச்சை ஆனது
இதுவும் சர்ச்சை ஆகி இருக்கிறது. இவர் வழக்கில் இருந்து தப்பிக்க பணம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் இவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு அதை எழுதி கொடுத்து, பின் பணம் கொடுத்து சரிக்கட்டி இருக்கிறார் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.