கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 5ல் 4 பேருக்கு நரம்பு பாதிப்பு...புதிய ஆய்வில் தகவல்!!
சிகாகோ: கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 5ல் 4 பேருக்கு நரம்பு சம்பந்தமான தசை வலி, தலைவலி, குழப்பம், தலைச்சுற்றல், நுகர்வு தன்மை இழப்பு, சுவை தெரியாமல் போவது ஆகியவை இருக்கும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சுவை தெரியாது, நுகர்வு தன்மை இருக்காது என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், கொரோனா தொற்று வந்தவர்களில் பலருக்கும் இருதய பாதிப்பும் ஏற்பட்டு இருப்பது பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
தற்போது இதையெல்லாம் கடந்து நரம்பு தொடர்பான பாதிப்புகளும் ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான ஆய்வை சிகாகோவில் இருக்கும் நார்த்வெஸ்டர்ன் மெடிசன் நரம்பியல் தொற்று நிபுணர் ஐகோர் கோரல்னிக் மேற்கொண்டு இருந்த ஆய்வில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு, மூளை செயல்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இது லேசான குழப்பத்தில் இருந்து கோமா வரை இட்டுச் செல்லும் என்று கண்டறிந்துள்ளார்.
தமிழகத்தில் 5017 பேருக்கு புதிதாக இன்று கொரோனா தொற்று... உயிரிழப்பு 71!!
மருத்துவமனைக்கு கொரோனா தொற்றுடன் வந்திருந்த 509 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளார். லேசான தொற்றினால் நுரையீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு உடனடியாக சரியாகிவிடும் என்று கூறிவிட முடியாது. அதன் பாதிப்பு நீண்ட நாட்களுக்கு இருக்கும். மூளை பாதிப்பு என்பது ஆண்களுக்கு அதிகமாக ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
Clinical and Translational Neurology என்ற மருத்துவ நாளிதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதில், சீனாவில் மேற்கொண்ட ஆய்வில் கொரோனா வைரஸ் நோய் ஏற்பட்டவர்களில் 36% பேருக்கும், ஸ்பெயினில் 57% பேருக்கும் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
509 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், 42% பேருக்கு முதலில் தொற்று வந்தபோது நரம்பு பிரச்சனை இருப்பது தெரிய வந்துள்ளது. 63% பேருக்கு மருத்துவமனையில் சேரும்போது, 82% பேருக்கு தொற்று வந்தபோதும் இந்த அறிகுறிகள் இருந்துள்ளன. பொதுவாக இவர்களுக்கு தசை வலி, தலைவலி, மூளையில் தொற்று ஆகியவை ஏறபட்டுள்ளது.
இந்த தொற்று மூளையை மட்டும் பாதிக்கிறதா அல்லது மொத்தமாக செயல்படுவதை தடுக்கிறதா என்பது குறித்த ஆய்வையும் மேற்கொண்டு வருவதாக மருத்துவர் கோரல்னிக் தெரிவித்து இருக்கிறார். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறதா என்பது குறித்தும் எதிர்காலத்தில் ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.