கொரோனா வாக்சின்.. முந்திக் கொண்ட ரஷ்யா.. ரெடி ஆய்ருச்சாம்.. மக்களுக்கு செலுத்த மும்முரம்!
மாஸ்கோ: ரஷ்யா கண்டுபிடித்து இருக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை வரும் ஆகஸ்ட் 10 - 12ஆம் தேதிவாக்கில் பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் ரஷ்யா விரைவில் மக்களுக்கு தடுப்பு மருந்தை விநியோகிக்கும் என்ற நம்பிக்கை இதன் மூலம் பிறந்துள்ளது.
உலக அளவில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கும் நிலையில், ரஷ்யா தற்போது முந்திக் கொண்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து...மனித பரிசோதனை... இந்தியாவில் 5 இடங்கள் தேர்வு!!
மக்களுக்கு செலுத்தப்படும்
இதுகுறித்து வெளியான அறிக்கையில், ''மாஸ்கோவில் இருக்கும் கமலியா தொற்று நோய் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 10 -12 ஆம் தேதி வாக்கில் இந்த மருந்தை பொது மக்களுக்கு அளிக்க பதிவு செய்ய இருக்கிறது. பதிவு செய்த மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் பொது மக்களுக்கு இந்த மருந்தை செலுத்த அனுமதி கிடைத்து விடும்'' என்று தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட ஆய்வு
இதற்கு முன்னதாக அறிக்கை வெளியிட்டு இருந்த இந்த நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்துக்கான மனித பரிசோதனை முடிந்துவிட்டது. ஜூலை இரண்டாவது வாரத்தில் மனித பரிசோதனையின் முதலாவது கட்டத்தை முடித்து விட்டோம். ஜூலை 13 ஆம் தேதிதான் இரண்டாம் கட்ட பரிசோதனை துவங்கி உள்ளோம் போன்ற தகவல்களை வெளியிட்டு இருந்தது.
பரிசோதனை முடியாமல் அவசரம்
பொதுவாக மனிதரிடம் மூன்று கட்ட பரிசோதனை முடிந்த பின்னர்தான் அனுமதி அளிக்கப்படும். தற்போது ரஷ்யாவின் கமலியா தொற்று நோய் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, இரண்டாம் கட்ட பரிசோதனை முடிந்த பின்னர், மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு செல்லாமல், மக்களுக்கு செலுத்த அனுமதி பெற இருப்பதாகத் தெரிகிறது.
செப்டம்பரில் தயாரிப்பு
இரண்டாம கட்ட பரிசோதனை முடிந்து வரும் ஆகஸ்ட் மாதம் அனுமதி பெற்ற பின்னர். மூன்றாம் கட்ட ஆய்வுக்குள் கமலியா தொற்று நோய் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் செல்லும். அதேசமயம், சுகாதார ஊழியர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக வரும் செப்டம்பர் மாதம் இந்த மருந்தை பெரிய அளவில் கமலியா தொற்று நோய் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்றாம் கட்டம் இறுதியானது
முதல் கட்ட பரிசோதனையில் சிலருக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வே சில வாரங்களில் இருந்து சில மாதங்களுக்கு செல்லலாம். இரண்டாம் கட்ட ஆய்வில் நோய்க்கு எதிராக எந்தளவிற்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கிறது என்று ஆய்வு செய்யப்படும். மூன்றாம் கட்டத்தில் சில நூறு தன்னார்வலர்களுக்கு பரிசோதிக்கப்படும். இந்த மூன்றாம் கட்டத்தில் சிலருக்கு உண்மையான தடுப்பு மருந்து செலுத்தப்படும், சிலருக்கு வெறும் தண்ணீர் மட்டுமே செலுத்தப்படும். ஆனால், அவர்களுக்கு இந்த உண்மை தெரிவிக்கப்படாது. எந்தளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது, எத்தனை நாட்களுக்கு கிடைக்கிறது என்பது இந்த ஆய்வில் தெரிய வரும்.
Recommended Video
சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிப்பு
இதற்கிடையே, பிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் இந்த பரிசோதனையில் ஈடுபடவும், மருந்து தயாரிக்கவும் அனுமதி பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் மனித பரிசோதனை செய்ய மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.