'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்
பெய்ஜிங்: கொரோனா தோற்றம் குறித்து வூஹான் ஆய்வகத்தில் சோதனை நடத்துவதற்கு முன், அமெரிக்காவிலுள்ள ஃபோர்ட் டெட்ரிக் ராணுவ ஆய்வகத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும் என்றும் அதில் பல உண்மைகள் வெளிவரும் என்றும் சீனா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
Recommended Video
அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து உலக நாடுகளும் கொரோனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 1.5 ஆண்டுகளாக கொரோனாவை கட்டுப்படுத்துவதே அனைத்து நாடுகளுக்கும் முக்கிய தலைவலியாக இருந்தது
அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்
இப்போது கொரோனா வேக்சின் கிடைத்துள்ளதால் மெல்ல இயல்பு நிலையை நோக்கி நாம் திரும்பி வருகிறது. அதேநேரம் கொரோனா ஆய்வுகளும் ஒருபுறம் தொடர்கிறது
உலக சுகாதார அமைப்பு
குறிப்பாக கொரோனா தோற்றம் குறித்த ஆய்வு. கொரோனா எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு யாரிடமும் தெளிவான பதில் இல்லை. வூஹான் ஆய்வகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் WHO ஆய்வாளர்கள் முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்தச் சூழலில் 2ஆம் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள வூஹான் நகருக்கு ஆராய்ச்சியாளர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தது.
சீனா
வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வெளியேறியிருக்கலாம் என்ற கருத்து வலுத்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது. இதற்குச் சீனா மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது. ஏற்கனவே, உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்களை அனுமதிக்க மாட்டேன் எனச் சீனா சொல்லிவிட்டது. இதனால் சீனா மீதான சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா ஆய்வகம்
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியாங், "கொரோனா தோற்றம் குறித்து ஆய்வகங்களில் விசாரணை செய்ய வேண்டும் என்றால், உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் முதலில் அமெரிக்காவிலுள்ள ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தில் ஆய்வு நடத்த வேண்டும். அமெரிக்கா பொறுப்பான முறையில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்களை அழைத்து ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். அப்போது தான் உண்மைகள் உலகிற்குத் தெரிய வரும்" என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஃபோர்ட் டெட்ரிக் ராணுவ ஆய்வகம்
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் அமைந்துள்ளது ஃபோர்ட் டெட்ரிக் ராணுவ ஆய்வகம். வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்பதால் அதனை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உலக நாடுகள் கோரி வரும் நிலையில், சீனா அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஃபோர்ட் டெட்ரிக் ராணுவ ஆய்வகத்தைக் கையில் எடுத்துள்ளது. ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தில் சோதனை செய்ய வேண்டும் என்ற கடந்த ஜூலை 17ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆன்லைன் பெட்டிஷனில் சுமார் 1.3 கோடி சீன மக்கள் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1.3 கோடி போர்
முன்னதாக இது குறித்து சீனா செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியாங் கூறுகையில், "ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தில் உயிரியல் ஆயுதங்கள் உள்ளதாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அமெரிக்கா உரிய விளக்கத்தைத் தர வேண்டும். இதற்காக 1.3 கோடி சீனர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இன்னும்கூட அமெரிக்க மவுனம் சாதிப்பது ஏன்? இந்த பிரச்சினையில் தெளிவற்ற தன்மை நிலவுவது ஏன்? இப்போது வெளிப்படைத்தன்மை என்ன ஆயிற்று?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார்.
வூஹான் ஆய்வகம்
வூஹான் ஆய்வு மையத்திலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியதாக வெளியான தகவலை முதலில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், அமெரிக்கப் புலனாய்வுத் துறை, கொரோனா குறித்து சீனா வெளியுலகிற்குக் கூறுவதற்கு முன்னரே கொரோனா ஒத்த அறிகுறிகளுடன் வூஹான் ஆய்வகத்தில் பணிபுரியும் சிலர் மருத்துவமனைகளில் அனுமதியாகியுள்ளதாகத் தெரிவித்திருந்தது. அதன் பின்னரே வூஹான் ஆய்வகம் விஷயம் சூடு பிடித்தது. அதன் பிறகு வூஹான் ஆய்வு மையத்திலிருந்து கொரோனா பரவியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. அதற்குத் தான் சீனா இப்போது எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளது.