கொரோனா சிகிச்சையில் தந்தை.. மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட அன்பு மகன்!
இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவருக்கு தனது மகனின் திருமணத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜெருசலேம்: இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவருக்கு தனது மகனின் திருமணத்தை பார்க்கும் வாய்ப்பை மருத்துவமனை நிர்வாகம் ஏற்படுத்தி தந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு கடந்த ஊரடங்கு மே மாதம் தொடக்கத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும் இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தே வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த 56 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் கடந்த மாதம் முதல் ஜெருசலேத்தில் உள்ள ஒரு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா தொற்று காரணமாக அவர் தனிமை அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் அந்த முதியவரின் மகனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. தனது திருமணத்தை தந்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட மகன், மருத்தவமனை நிர்வாகத்திடம் பேசி சிறப்பு அனுமதி பெற்றார்.
இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் கீழ் தளத்தில் திருமணத்துக்கான மேடை அமைப்பட்டது. மணமகனும், மணமகளும் அதில் இருந்தபடி திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண வைபவங்களை மணமகனின் தந்தை தனது அறையின் ஜன்னல் வழியே கண்டுகழித்தார்.
இதுதொடர்பான ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மகனின் திருமணத்தை கொரோனா பாதித்த தந்தை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.