சீனா - அதிகரிக்கும் ஆதரவற்ற குழந்தைகள்… தொட்டில் குழந்தை திட்டம் நிறுத்தம்
பீஜிங்: எண்ணிக்கை அதிகரிப்பால் சீனாவில் தொட்டில் குழந்தை திட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
உலகின் மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில் தீர்க்க முடியாத நோயின் தாக்கத்துடன் பிறக்கும் குழந்தைகளை சாலையோரங்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் பல பெற்றோர் வீசி விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால், மலர்ந்து மணம் வீச வேண்டிய இளம் மொட்டுகள் மரணத்தை தழுவ நேரிடுகிறது.
தொட்டில் குழந்தை திட்டம்:
இந்த அவல நிலையை போக்க தீர்மானித்த சீன அரசு நாட்டின் 10 மாகாணங்களில் தமிழ்நாட்டில் உள்ளது போல் "தொட்டில் குழந்தை திட்டம்" ஒன்றினை கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. முதல் கட்டமாக இதற்காக 25 காப்பகங்கள் தொடங்கப்பட்டன.
கொடிக்கு பாரமான பழங்கள்:
தங்களுக்கு தேவை இல்லை என கருதும் தூக்கி வரும் பெற்றோர் குழந்தையை வாசலில் கிடத்திவிட்டு அழைப்பு மணியை அழுத்தி விட்டு சென்று விடலாம். மணியோசை கேட்டு வெளியே வரும் செவிலியர்கள் உடனடியாக அந்த குழந்தையை எடுத்து சென்று கவனிக்க தொடங்கி விடுவார்கள்.
காப்பகத்தில் விடலாம்:
தங்களுக்கு பாரம் என்று கருதும் குழந்தைகளை இந்த காப்பகத்தில் பெற்றோர் ஒப்படைக்கலாம் என்று அரசு அறிவித்தது.
இன்குபேட்டர் கட்டில்:
இளம் சிசுக்களை காப்பாற்ற பிராணவாயுவுடன் கூடிய "இன்குபேட்டர் கட்டில்", சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், பாதுகாப்பு பணிக்கு செவிலியர்கள் என அனைத்து வசதிகளுடன் உள்ள இந்த காப்பகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எண்ணிக்கை உயர்வு:
இவற்றில் குவாங்டாங் மாகாணத்தின் குவாங்சூ பகுதியில்ஆயிரம் குழந்தைகளை வைத்து பராமரிக்க கூடிய வகையில் ஒரு காப்பகம் இயங்கி வருகிறது. கடந்த இரண்டு மாத காலத்தில் பெற்றோரால் இங்கு கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்து 121 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 67 சதவீதம் குழந்தைகள் ஒரு வயதுக்குட்பட்டவையாகும்.
அதிகரிக்கும் அனாதை குழந்தைகள்:
சராசரியாக நாளொன்றுக்கு 20 குழந்தைகள் வீதம் இந்த காப்பகத்தில் புதிய விருந்தாளியாக சேர்ந்து கொள்வதால் மேற்கொண்டு இங்கு குழந்தைகளை வைத்து பராமரிக்க முடியாது என்று கருதிய இந்த காப்பக அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இங்கு கொண்டு வரப்பட்ட 262 குழந்தைகளை திருப்பி அனுப்பி விட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.