கடலில் விழுந்த ஏர்ஏசியா விமான கருப்பு பெட்டி சிக்னல் கண்டுபிடிப்பு
ஜகர்தா: ஜாவா கடலில் விழுந்து மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இந்தோனேசிய ராணுவ கமாண்டர் மோயல்டோகோ தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 28ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூர் கிளம்பிய ஏர்ஏசியா விமானம் க்யூஇசட்8501 ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. ஜாவா கடலில் விமான பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 47 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் விமானத்தின் வால் பகுதி உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் வால் பகுதி கண்டெடுக்கப்பட்ட அன்றே கருப்பு பெட்டி விரைவில் கிடைத்துவிடும் என்று மீட்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். இந்நிலையில் வால் பகுதி கிடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கருப்பு பெட்டியில் இருந்து வரும் சிக்னல் கிடைத்துள்ளது. சிக்னல் வந்த இடத்தில் மீட்புக் குழுவினர் கருப்பு பெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று ராணு கமாண்டர் மோயல்டோகோ தெரிவித்துள்ளார்.
கருப்பு பெட்டி பற்றிய மோயல்டோகோவின் அறிவிப்பை உறுதிபடுத்த தேடல் பணியில் ஈடுபட்டுள்ள பசர்னஸ் நிறுவன தலைவர் பாம்பாங் சோயலிஸ்டோ மறுத்துவிட்டார்.
இன்று வானிலை நல்லபடியாக இருப்பதால் தேடல் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல பயணிகளின் உடல்கள் விமானத்தின் பாகங்களில் சிக்கியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.