அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதட்டம்... கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்
பாங்காக்: அமெரிக்கா - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழல், நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உருவாகி உள்ளது.
தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்தார். மேலும், அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளார்.
மேலும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாதும் என்றும், மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று எச்சரித்து இருக்கிறார். இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவுகிறது.
நிலவில் மனிதன் காலடி வைத்த 50வது ஆண்டு தினம்... அமெரிக்காவில் கோலாகல கொண்டாட்டம்
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால், டிரம்ப் அதிர்ச்சி அடைந்தார். இதற்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது வான்வெளி தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த உத்தரவை டிரம்ப் வாபஸ் பெற்றார். இந்தநிலையில், பாரசீக வளைகுடாவில் ஹோர்முஜ் ஜலசந்தியில் அமெரிக்க வீரர்களை அச்சுறுத்தும் வகையில், பறந்த ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதனால், போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உருவாகி உள்ளது. ஏனெனில் சர்வதேச அளவில் வளைகுடா நாடுகளில் பெறப்படும் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் 20 சதவீத கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதி வழியாக தான் செல்கின்றன.
தற்போது இங்கு பதட்டம் நிலவுவதால் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களை வர்த்தக நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது.