நல்ல வாய்ப்பை தவற விட்ட தோனி.. கொஞ்சம் யோசிச்சிருந்தா ராஜஸ்தான் கதையை முடிச்சிருக்கலாம்
சார்ஜா: முக்கியமான நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், அதிரடி வீரருமான ஸ்டீவன் ஸ்மித்துக்கு, டிஆர்எஸ் மூலம் அப்பீல் கேட்காமல் விட்டு பெரிய தவறு செய்துவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சார்ஜாவில் இன்று நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் ராஜஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தார்.
ஆரம்பத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சற்று மெதுவாக விளையாடியது. ஆனால் சஞ்சு சாம்சன் களத்துக்கு வந்ததும் அதிரடி பற்றிக் கொண்டது.
பழசை மறந்து.. சரியான நேரத்தில் சரியான நபரை இறக்கிய தோனி.. போட்டியில் டிவிஸ்ட் நடந்தது இங்குதான்!
ஸ்பின்னர்கள் பந்து வீச்சு
சஞ்சய் சாம்சங் மட்டுமின்றி ஸ்டீவ் ஸ்மித்தும் அதிரடியாக ஆட தொடங்கினார். ரவீந்திர ஜடேஜா, பியூஸ் சாவ்லா ஆகியோரின் பந்து வீச்சுகள் மைதானத்தின் நாலா புறமும் சிக்சர்களாக மாறியது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்பின்னர்கள்தான் குறைவாக ரன் கொடுத்தனர். ஆனால் இந்த போட்டியில் ஸ்பின்னர்கள் வாங்கிய அடி வேறு எந்த வேகப் பந்து வீச்சாளரும் வாங்கவில்லை.
ஜடேஜா ஓவர்
இருப்பினும் சற்று சுதாரித்துக் கொண்டு தனது லைன் மற்றும் லென்த் ஆகியவற்றை மாற்றி 9வது ஓவரை வீசிக் கொண்டிருந்தார் ரவீந்திர ஜடேஜா. அதற்கு பலனும் கிடைத்தது. அவர் அந்த ஓவரின் 2-வது பந்தை வீசிய போது பந்து பேட்டில் படாமல் கால் காப்பு (Bad) மீது பட்டது. இதையடுத்து எல்பிடபிள்யூ கேட்டு, ஜடேஜாவும், தோனியும் நடுவரிடம் முறையீடு செய்தனர். ஆனால் அவுட் இல்லை என்று நடுவர் கூறிவிட்டார்.
டிஆர்எஸ் கேட்கவில்லை
இதையடுத்து தோனியும், ஜடேஜாவும் இதற்கு டிஆர்எஸ் அப்பீல் செய்யலாமா என்று யோசித்தனர். ஆனால் பிறகு அந்த முடிவை கைவிட்டு விட்டனர். ஆனால் தொலைக்காட்சி ரிப்ளேயில் பார்த்தபோது ஒரு வேளை அப்பில் செய்திருந்தால் அதற்கு அவுட் கிடைத்திருக்கும் என்று தெரிந்தது. ஏனெனில் பந்து ஸ்டெம்ப் மீது மீது படும் உயரத்தில்தான் சென்றது என்று ரிப்ளையில் தெளிவாக தெரிந்தது. டிஆர்எஸ் அப்பீல் செய்வதில் தோனி வல்லவர் என்ற பெயர் உண்டு. ஆனால் இந்த முறை தோனி இந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது ஸ்மித் 31 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
ஸ்மித் பேட்டிங்
இதன்பிறகு மறு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் ஸ்மித் அதிரடியாக ஆடி ரன் குவிப்பு செய்தபடி அரைசதம் கடந்து விட்டார். ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் தவிர மற்றவர்கள் பெரிய அளவுக்கு ரன் குவிக்கவில்லை. ஆனால் ஸ்மித் ரன் குவித்ததன் காரணமாக, மிகப்பெரிய ஸ்கோரை ராஜஸ்தான் ராயல்ஸ் குவித்துவிட்டது. ஒருவேளை டிஆர்எஸ் எடுக்கப்பட்டிருந்தால் ஸ்மித் அவுட் செய்யப்பட்டிருப்பார். ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறி இருக்கும் என்பதுதான் உண்மை.