புரட்சி தலைவர் பிடல் காஸ்ட்ரோ... வழக்கறிஞர் போராளியான கதை...
மாபெரும் புரட்சியாளரும் கியூபாவின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ மரணமடைந்து விட்டதாக கியூபாவின் அரசின் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கியூபா மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஹவானா: தடம் பார்த்து நடப்பவன் மனிதன்.தடம் பதித்து நடப்பவனே மாமனிதன் என்ற வார்த்தைக்கு உதாரணமாக திகழ்ந்தவர் பிடல் காஸ்ட்ரோ. மாபெரும் புரட்சி நாயகனாக அமெரிக்காவை அலற வைத்தவர் பிடல் காஸ்ட்ரோ. உடல் நலக்குறைவினால் இரவு 10.30 மணிக்கு அவர் மரணமடைந்து விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது கியூபா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ. கியூபாவின் அதிகாரப்பூர்வ மொழி ஸ்பானிஷ். பல புயல்களை எதிர்கொண்ட நாடு
அமெரிக்கா ஒதுக்கி வைத்ததனால் பொருளாதாரம் சீர்குலைந்த நாடு கியூபா. அதன் அரசியல்கூட இதனால் பெருமளவில் சிதைந்தது. என்றாலும்கூட கியூபா என்றவுடன் புரட்சி வீரர்களுக்கு நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ.
90 ஆண்டுகாலம் கியூபாவில் வாழ்ந்து கியூபா மக்களின் மனதில் மட்டுமல்லாது உலக மக்களின் புரட்சியை ஆதரிக்கும், ரசிக்கும் மக்களின் ஹீரோவாக மனதில் நிறைந்திருந்த பிடல் காஸ்ட்ரோ இன்று ஹவானாவில் காலமானதாக கியூபா அதிபரும் சகோதருமான ரால் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
• 1926 ஆகஸ்ட் 13 அன்று கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறந்தார். இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர்.
•விவசாயம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் என்றால் அவருக்கு மிகவும் விருப்பம். பாடங்கள் ஒருபுறமிருக்க பாடமல்லாத விஷயங்களிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.
•சிறு வயது முதலே அரசியலில் அதிக ஆர்வம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ, தடகளப் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். 1945-ல் கியூபாவின் தலைநகரில் இருந்த ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை எடுத்துப் படித்தார்.
•கல்லூரிப் பருவத்தில் பிடல் காஸ்ட்ரோவின் அபாரமான பேச்சுத் திறமை வெளிப்பட்டது. கல்லூரியில் அவர் மாணவர் சங்கத் தலைவர் பதவியை வகிக்கவில்லை. அப்படிப்பட்ட ஆசை அவருக்கு இல்லை என்பதில்லை. சிலமுறை மாணவர் சங்கத் தேர்தலில் நின்றும் அவர் ஜெயிக்கவில்லை. என்றாலும் பிடல் காஸ்ட்ரோவின் புகழ் பரவிக் கொண்டேவந்தது. அவரது அரசியல் ஆசையும் பெருகிக் கொண்டே வந்தது.
•பிடல் காஸ்ட்ரோவும் ஓர் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ மீது எதிரணியைச் சேர்ந்த ஒரு மாணவர் தலைவனை அவர் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பரவலாகப் பேசப்பட்டாலும் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை.
•பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கம்யூனிசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்ட பிடல் காஸ்ட்ரோ அதனால் ஈர்க்கப்பட்டார். கூடவே அரசியலில் நேரடிப் பங்கேற்கும் ஆர்வமும் வந்தது.
•தொழில் முறை வழக்கறிஞரான இவர் மிகச்சிறந்த பேச்சாளர். இவரது பேச்சுக்கு மக்கள் மட்டுமல்ல நீதிபதிகளும் கூட மயங்கிப் போவார்களாம்.
• சேகுவேரா உடன் இணைந்து கியூபாவில் ஆட்சி செய்து வந்த சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராக கொரில்லா முறை தாக்குதலை நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைபற்றினார் பிடல் காஸ்ட்ரோ. பாடிஸ்டாவை தலை தெறிக்க ஓட வைத்தார்.
• காஸ்ட்ரோவின் பல முயற்சிகள் தோல்வியை தழுவினாலும் இறுதியில் அவரே வெற்றி பெற்றார். தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ, கடந்த 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், கடந்த 1976 முதல் 2008 வரை அந்நாட்டு அதிபராகவும் பொறுப்பு வகித்தார்.
•கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கிய இவர், 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்டார். கியூபாவில் அனைவருக்கும் இலவச கல்வியை அறிமுகம் செய்தார்.
•உடல்நிலை சரியில்லா காரணத்தால் கடந்த 2008ம் ஆண்டில் பதவியில் இருந்து விலகினார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அந்நாட்டு அதிபரானார். சகோதரருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
•மாபெரும் புரட்சி நாயகனாக திகழ்ந்த பிடல் உலகின் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்ற பெருமைக்குரியவர். 90 வயதான பிடல் காஸ்ட்ரோ, இன்று ஹவானாவில் மரணமடைந்து விட்டதாக அவரது சகோதரரும், அந்நாட்டு அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
•அவரது மறைவு கியூபா நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகத்தில் புரட்சியை விரும்பும் நேசிக்கும் அனைவருக்கும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
• புரட்சியாளராகவும் போராளியாகவும் மட்டுமல்ல சிறந்த ஆட்சியாளராகவும் வெற்றி பெற்ற பிடல் காஸ்ட்ரோவின் பெயரை இன்றைய தலைமுறையினர் அத்தனை எளிதில் மறந்து விட மாட்டார்கள் என்பதே உண்மை.