ரூபாய் நோட்டு விவகாரத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கும் அதிருப்தியாம்
பீஜிங்: ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹாங்காங் சென்றுள்ள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி, அங்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒழிக்கும் முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ளும்போது நிதியமைச்சகம் போதிய முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.
ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பது மிக முக்கியமான விஷயம். இதற்காக திட்டம் தொடங்கிய முதல் நாளில் இருந்து நிதியமைச்சகம் முழுமூச்சுடன் பணியாற்றியிருக்க வேண்டும்.
வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொடுக்கும் போது மூத்த குடிமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறி விட்டனர். நிதியமைச்சகம் சரியான நேரத்தில் உரிய முடிவுகளை எடுத்து செயல்படாதது மன்னிக்க முடியாதது.
பாகிஸ்தானுக்கு பணம் அச்சடிப்பதற்கு காகிதம் சப்ளை செய்யும் லண்டன் நிறுவனத்திடம்தான் முந்தைய மத்திய அரசு, இந்தியாவுக்கான பண அச்சடிப்பு காகிதத்தை வாங்கி வந்தது. இதுதான் இந்திய கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடும் பாகிஸ்தானுக்கு வசதியாகிவந்தது. அது தெரிந்திருந்தும் அதே நிறுவனத்துக்கு தான் தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனும் ஒப்பந்தம் வழங்கினர். இது இந்திய கள்ள நோட்டுகளை பாகிஸ்தான் செலவில்லாமல் அச்சடிக்க வாய்ப்பாக அமைந்துவிட்டது. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமிக்கு நிதி அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இதுபோல ஒரு பேட்டியை அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.