லாட்டரியை டிப்ஸாக கொடுத்த ‘குடிமகன்’: பணிப்பெண்ணுக்கு கிடைத்த ரூ.10 லட்சம் பரிசு
அமெரிக்காவின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் உள்ள ஒரு பாரில் பணிப்புரிந்து வருபவர் 25 வயதான அவ்ரோரா கெபார்ட் என்ற இளம்பெண். பொதுவாக அங்கு மது அருந்த வருபவர்கள் தங்களுக்கு மது பரிமாறுபவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில், சம்பவத்தன்று, பாருக்கு வந்த ஒரு வாடிக்கையாளர் மது அருந்திவிட்டு புறப்படும்போது, அவ்ரோராவுக்கு 'டிப்ஸ்' ஆக ஒரு லாட்டரி டிக்கெட்டை அளித்துள்ளார்.
வாடிக்கையாளர் டிப்ஸாக கொடுத்த டிக்கெட்டை வைத்து விளையாடிய அவ்ரோராவுக்கு 17 ஆயிரத்து 500 டாலர்கள் பரிசு கிடைத்தது. இது இந்திய மதிப்பில் சுமார் பத்து லட்சத்து 86 ஆயிரத்து நானூறு ரூபாய் ஆகும்.
பரிசு விழுந்த அதிர்ச்சியிலும், மனசாட்சிப்படி நடந்து கொள்ள தீர்மானித்தார் அவ்ரோரா. அதன்படி, பரிசுத் தொகையை லாட்டரி சீட்டை டிப்ஸாக அளித்த வாடிக்கையாளரிடமே திருப்பிக் கொடுக்கச் சென்றார். ஆனால், அந்த வாடிக்கையாளரோ அந்த பணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாராம்.
எதிர்பாராமல் டிப்ஸில் கிடைத்த இந்த பணத்தில் முதலில் ஒரு சோபா வாங்கவும், பின்னர் மீதி பணத்தை எதிர்காலத்திற்கான சேமிப்பாக்கவும் திட்டமிட்டுள்ளாராம் அவ்ரோரா.