அமெரிக்காவில் மிகப்பெரிய சைபர் தாக்குதல்- டுவிட்டர், நெட்ஃப்ளிக்ஸ் சேவை முடக்கம்
நியூயார்க்(யு.எஸ்) இன்டெர்நெட் சேவை வழங்கும் DNY நிறுவனத்தின் இணையதளங்களில் ஹேக்கர்ஸ் செய்த சைபர் தாக்குதலினால், அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளில் ட்விட்டர், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவை பாதிக்கப் பட்டது.
DNY நிறுவன ஊழியர்கள் விரைவில் சேவையை திரும்பவும் கொண்டுவந்து விட்டனர். மிகவும் நேர்த்தியாக திட்டமிட்ட தாக்குதலாக இருந்தது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கோடிக்கணக்கான IP முகவரிகளிலிருந்து ஒரே நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மத்திய உளவுத்துறை(FBI) இது குறித்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. என்பிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அதிகாரி, 'இந்த தாக்குதலுக்கு பின்னால் ஏதாவது அரசு அல்லது இயக்கங்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. விசாரணை முடிவு தெரிய நீண்ட நாட்கள் ஆகலாம்' என்று தெரிவித்துள்ளார்.
பிரிண்டர்கள், DVRs மற்றும் இன்டெர்நெட்டுடன் இணைக்கப்பட்டுள்ள கருவிகளிலிருந்து தாக்குதல் நடந்துள்ளது என்று DNY நிறுவனத்தார் கூறியுள்ளனர்
அளவுக் கதிகமான போக்குவரத்தை உருவாக்குவதன் மூலம் இத்தகைய முடக்குதல் சாத்தியமாகும். காலை 7.10 கிழக்கு நேரத்தில் முடக்கமான சேவை 9.20 மணிக்கு மீண்டும் வழக்கம் போல் இயக்கத்திற்கு வந்தது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மட்டுமல்லாமல், பிற நாடுகளிலும் இந்த சேவை முடக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய தாக்குதல்கள், வங்கி, ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட சேவைகளை பாதித்தால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ரஷ்யா அமெரிக்க சர்வர்களில் ஊடுருவி, அதிபர் தேர்தலில் குழப்பம் விளைவிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இனிமேல் ராக்கெட் விட்டு நாட்டை தாக்கிய காலம் மலையேறி, இன்டெர்நெட்டை முடக்கம் செய்து பொருளாதாரத்தையையே நிலைகுலையச் செய்து விடுவார்கள் போலிருக்கு.