தரையில் கால் படாமல்... 3139 படிகளை சைக்கிளாலேயே ஏறி... தன் சாதனையை தானே முறியடித்த ஆசிரியர்!
லண்டன்: தரையில் கால் படாமல் 3139 படிக்கட்டுகளை சைக்கிளாலேயே ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளார் போலந்து நாட்டின் சைக்கிள் வீரரான கிறிஸ்டியன் ஹெர்பா.
சைக்கிள் ஓட்டுவது உடல் நலத்திற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மாசடையாமல் காக்கும். எனவே, உலகின் பல்வேறு பகுதிகளில் சைக்கிள் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இந்நிலையில், போலந்து நாட்டைச் சேர்ந்த சைக்கிள் வீரர் கிறிஸ்டியன் ஹெர்பா சைக்கிள் ஓட்டுவதில் புதிய சாதனை படைத்துள்ளார்.
உடற்கல்வி ஆசிரியர்....
போலந்து நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் கிறிஸ்டியன் ஹெர்பா. இவர் ஆசிரியர் மட்டுமின்றி சைக்கிள் வீரரும் ஆவார். எனவே, சைக்கிள் ஓட்டுவதில் சாதனை புரிய முடிவெடுத்தார் ஹெர்பா.
புதிய சாதனை...
அதன்படி, தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் புகழ் பெற்ற 101 கோபுரத்தில் உள்ள 3139 படிக்கட்டுகளையும் சைக்கிளில் ஏறி ஹெர்பா சாதனை படைத்தார். ஒவ்வொரு படியையும் துள்ளித்துள்ளி ஏறித் தொடங்கிய கிறிஸ்டியன், 2 மணி நேரம், 13 நிமிடங்களில் இலக்கை அடைந்தார்.
பாராட்டு...
சிறிதும் சோர்வடையாமல், கோபுரத்தின் உச்சியில் உள்ள 3139 வது படியை அடைந்த கிறிஸ்டியனுக்கு அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைத்தட்டி ஆரவாரத்துடன் பாராட்டு தெரிவித்தனர்.
நினைத்ததை முடிப்பவன்...
தனது இந்த சாதனை குறித்து 33 வயதான ஹெப்ரா கூறுகையில் "கடந்த வருடம் மெல்போர்னில் 2,919 படிகளை ஏறி நான் படைத்த உலக சாதனையை நானே முறியடிக்க வேண்டுமென நினைத்தேன். இன்று முறியடித்து விட்டேன்" என்றார்.