பேஸ்புக் நண்பன் பேரை பச்சைக்குத்திய மகள்.. அடித்த தந்தை- தண்டனை, 80 மணி நேர சம்பளமில்லா வேலை!
லண்டன்: இங்கிலாந்தில் தன்னுடைய பேஸ்புக் நண்பனின் பெயரை பச்சைக் குத்திய மகளை அடித்த தந்தைக்கு இடைக்கால பணிநீக்கமும், 80 மணி நேர கட்டணமில்லா வேலையும் அளித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.
இங்கிலாந்தை சேர்ந்த மார்க் ஜோன்ஸ் தன் 14 வயது மகளிடம் சமூக வலைதளங்கள் எதையும் பயன்படுத்தகூடாதென்று கட்டளையிட்டார். அவரது அம்மாவும் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தார்.
ஆனால், பருவத்தில் மற்றவர்கள் விலக்கி வைப்பதையே மனம் விரும்பும் என்பதால் அவர் ரகசியமாக பேஸ்புக் பயன்படுத்தி வந்தார். அதோடு நில்லாமல் தன் பேஸ்புக் நண்பனின் பெயரை தோள்பட்டையில் பச்சை குத்தினார்.
இது அவரது அம்மாவுக்கு தெரிய வந்ததும் அவர் அதை ஜோன்ஸிடம் தெரிவித்தார். ஏற்கனவே மகள் தன் சொல் பேச்சை கேட்காததால் கோபத்தில் இருந்த ஜோன்சுக்கு இதை கேள்விப்பட்டதும் ஆத்திரம் அதிகமானது.
பயந்து போய் மாடிக்கு ஓடிய அந்த பெண்ணை துரத்திச்சென்று தனது பெல்ட்டால் கண்மூடித்தனமாக அடித்து விளாசினார். தன் ஆத்திரம் தீரும் வரை அடித்ததும் கத்தியை பழுக்கக்காய்ச்சி அந்த பையனின் பெயரை எடுத்து விடுமாறும் மிரட்டினார்.
அடுத்த நாள் பள்ளிக்கு சென்ற அந்த சிறுமியை பார்த்த ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தார். உடனடியாக அவரது தந்தையை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதற்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்காத நீதிபதி அவரை 18 மாதம் இடைக்கால பணி நீக்கம் செய்தும், 80 மணி நேரம் கட்டணமின்றி வேலை பார்க்கவும் தீர்ப்பளித்தார்.