பிரேசிலில் அணை உடைந்து விபத்து.. 121 பேர் பலி... 200க்கும் அதிகமானோர் மாயம்
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தில் அணை உடைந்த விபத்தில், உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது.
மினாஸ் கெராய்ஸ் மாகாணத்தின் புருமாடின்கோ நகரம் அருகே, 'வாலே' என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கம் இயங்கி வருகிறது.
இதன் அருகே நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத அணை இருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி உடைந்து நீர் வெளியேறியதில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
121 தொழிலாளர்கள் பலி
அப்போது, அருகிலிருந்த பழைய அணை திடீரென உடைந்தது. அதில் இருந்த சேறும் சகதியுமான தண்ணீர், வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதில், சுரங்க பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த 121 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 226 பேரை காணவில்லை.
2 வது சம்பவம்
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்டதால் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டின் புதிய அதிபராக ஜெய்ர் பொல்சனாரோ சமீபத்தில் பதவியேற்றார். அதன் பிறகு நடந்த முதல் பேரழிவாக இந்த சம்பவம் கருதப்படுகிறது.
3 பில்லியன் சொத்து முடக்கம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், சட்ட விதிமீறலுக்கு செலுத்த வேண்டிய அபாரத தொகைக்காகவும் ‘வாலே' நிறுவனத்தின் 3 பில்லியன் சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோசமான விபத்து
பிரேசிலில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிகப் பெரிய விபத்தாக பார்க்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு இதே மாதிரி, ஆஸ்திரேலியே சுரங்கத் தொழிற்சாலை அருகே அணை உடைந்து விபத்து ஏற்பட்டதில் 19 தொழிலாளர்கள் பலியாகினர். பொதுமக்கள் 25 ஆயிரம் பேர் தண்ணீர் இல்லாமல் பெரும் துன்பத்துக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.