பெரும் சிக்கல்.. கென்ய நாட்டில் உடைந்த அணையின் சொந்தக்காரர் யார் தெரியுமா?
Recommended Video
நைரோபி: கென்ய நாட்டில் அணை ஒன்று வெடித்து 47 பேர் வரை பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது இந்திய வம்சாவளியை சேர்ந்தவருடைய அணை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மன்சுகுல் பட்டேல் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெரும் விவசாயிக்கு சொந்தமான இந்த அணை சோலை என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதுவும் தமிழ்ப்பெயர் என்பது சிறப்பு.
பட்டேல் அணையில் இருந்து மீன் வளர்ப்பு, நீர்பாசனம் போன்ற தேவைகள் ஈடுகட்டப்பட்டு வந்தன. பட்டேலுக்கு சொந்தமாக 3 அணைகள் உள்ளதாகவும், அதில் இதுதான் பெரிதானது என்றும் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்தபோது அவர் அங்கு இல்லை என்பதால் உயிர் பிழைத்துள்ளார்.
அணை நீர் 2 கிராமங்களை சூறையாடியுள்ளது. மின் கம்பங்களை இழுத்துச் சென்றுள்ளதால், பல இடங்களில் மின்சாரம் இல்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பட்டேல் நிலை சிக்கலாகியுள்ளது. சட்டத்தின்பிடியில் அவர் சிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு பூக்களை ஏற்றுமதி செய்வதில் கென்யா முன்னணியில் உள்ளது. பட்டேலுக்கு சொந்தமாக 3500 ஏக்கரில் பூ விவசாய நிலம் உள்ளது. இந்த பூ பண்ணையின் பொது மேலாளர் வினோஜ் குமார் கூறுகையில், அணைக்கு மேலேயுள்ள வனப் பகுதியில் பெய்த மிக கடுமையான மழைதான் அணை உடைப்புக்கு காரணமாகிவிட்டது.
கடந்த இரு நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வந்தது. மரங்கள், கற்களை தண்ணீர் அடித்துக் கொண்டு அணைக்குள் தள்ளியது. இதனால் அணை உடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் கடுமையான வறட்சியை சந்தித்த கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, சோமாலியா, எதியோபியா மற்றும் உகாண்டா ஆகியவற்றில் கடந்த 2 மாதங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நூற்றுக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அணை உடைந்தபோது மக்கள் பலரும் வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்ததால், அதன் சேத மதிப்பு அதிகமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.