வாக்கெடுப்பு எதிரொலி: பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவிப்பு!
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறக் கூடாது; அப்படி வெளியேறினால் பிரிட்டன் மக்களின் எதிர்காலம் மிக மோசமாக பாதிக்கப்படும் என கூறி வந்தார் டேவிட் கேமரூன். இதற்கான வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற 52% பேரும் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்க 48% பேரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் நீடிக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். ஆனால் இங்கிலாந்து, வேல்ஸ் மக்கள் ஐரோபிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்துள்ளனர்.
இவ்வாக்கெடுப்பின் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, தாம் பிரதமர் பதவியில் இருந்து அக்டோபர் மாதம் விலக இருப்பதாக டேவிட் கேமரூன் அறிவித்தார்.