உங்க வீட்டு புள்ளையா நினைச்சி மன்னிச்சிருங்கப்பா.. படுத்தே விட்டார் வார்னர்
Recommended Video
சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள துணை கேப்டன் டேவிட் வார்னர், பந்தை சேதப்படுத்தி கோல்மால் செய்ததில், தனது பங்கிற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வார்னர் இதுகுறித்து கூறுகையில், "நான் என் பங்கிற்கு மன்னிப்பு கேட்டு பொறுப்பேற்கிறேன். இது விளையாட்டையும் அதன் ரசிகர்களுக்கும் ஏற்படுத்திய துன்பத்தை நான் புரிந்து கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
மேலும் அவர் மனம் திறந்து கூறியுள்ளதாவது:
சிட்னிக்கே போறேம்ப்பா
"நான் தற்போது சிட்னிக்கு செல்கிறேன், கிரிக்கெட்டை சேதப்படுத்தும் அளவுக்கு தவறுகள் செய்யப்பட்டுள்ளன, என் பங்கிற்கு நான் பொறுப்பேற்று, இந்த விளையாட்டையும் அதன் ரசிகர்களுக்கும் ஏற்படுத்திய துன்பத்தை உணர்ந்து கொள்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோதில் இருந்தே காதலித்த விளையாட்டுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டேன்.
குடும்பத்தோடு நேரம்
ஒரு ஆழ்ந்த சுவாசம் எடுத்துக்கொண்டு, என் குடும்பத்துடன், நண்பர்களிடமும், ஒரு சில நாட்கள் செலவிட உள்ளேன்" என்றும் வார்னர் கூறியுள்ளார். வார்னருக்கு மனைவியும், குழந்தையும் உள்ள நிலையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். வார்னர் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் 12 மாதங்களுக்கு அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்களில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்படவுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) அறிவித்துள்ளது.
பந்தை சேதப்படுத்தினர்
கேப் டவுனில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்தியற்கு வார்னரும், ஸ்மித்தும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் ஓட்டம்
எலக்ட்ரானிக் நிறுவனம் எல்ஜி புதனன்று, வார்னரை தனது புதிய ஒப்பந்தத்தில் இணைப்பதில் இருந்து பின்வாங்கிக்கொண்டது, காலாவதியாகும் ஒரு விளம்பர ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில்லை என்று அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.