பாக். மாஜி கிரிக்கெட் வீரர் கொடுத்த பார்ட்டியில் தாவூத் இப்ராஹிம்
கராச்சி: நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மரணமடைந்துவிட்டதாக வெளியான தகவல்களை பொய் என நிரூபிக்கும் வகையில் அவர் பார்ட்டியொன்றில் பங்கேற்ற தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு நாச வேலைகளில் தொடர்புள்ள நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளார்.
தாவூத்தை ஒப்படைக்க பல முறை இந்தியா கோரிக்கைவிடுத்தும், அதை பாகிஸ்தான் ஏற்கவில்லை.
உடல்நலக்குறைவு
இந்த நிலையில் தாவூத் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதாகவும், ஆபரேஷன் நடந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. துபாயில் இருந்து நர்ஸ் ஒருவர் தாவூத்தை கவனிக்க சென்றதாக கூறப்பட்டது.
விருந்து
இதையெல்லாம் வைத்து, தாவூத் இறந்துவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியான்டட் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்த சிறு விருந்து நிகழ்ச்சியொன்றில் தாவூத் பங்கேற்றுள்ளார். இதை இந்திய உளவுத்துறை உறுதி செய்துள்ளது.
முழு உடல்நலம் இல்லை
இருப்பினும் தாவூத் முழு உடல் நலத்தோடு இல்லை என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் கண்காணிப்பில் தாவூத் இருப்பதால் அவரை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.
பாதுகாப்பு
வெளி அடுக்கில் ஐஎஸ்ஐயும், அடுத்த அடுக்கில் போலீசாரும், மூன்றாவது அடுக்கில் தாவூத்தின் நம்பிக்கைக்குரிய தாதா ஜாவீத் சிக்னாவின் ஆட்களும் பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள். ஜாவித் மியான்டட்டின் மகன் ஜுனைட், தாவூத்தின் மகள் மருக்கை மணந்துள்ளது குறிப்பிடத்தக்கது.