மதகுருவாக மாறிய மகன்... மன உளைச்சலில் தாதா தாவூத் இப்ராஹிம்
ஆசை ஆசையாக வளர்த்த மகன் மதகுருவாக மாறியதால் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மனஉளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்: தன்னைப்போலவே தாதாவாக்கி அழகு பார்க்க நினைத்தேன்... ஆனால் அவன் மதகுருவாக மாறிவிட்டானே என்று நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம்.
மும்பை நிழல் உலக தாதா ஆக இருந்தவர் தாவுத் இப்ராகிம். மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான இவர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் கராச்சியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
தாவூத் இப்ராஹிம் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஒப்படைக்கும்படி இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அவர் அங்கு இல்லை என பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
பிரிந்து போன ஒரே மகன்
தாவுத் இப்ராஹிமுக்கு மொயின் நவாஸ் டி கஸ்கர் என்ற மகனும், மக்ரூக், மக்ரீன் ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தந்தையின் சட்ட விரோத நடவடிக்கைகள் பிடிக்காததால் மொயின் நவாஸ் அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
கராத்சி மசூதியில் மதகுரு
தாவூத் இப்ராகிமின் மகன் மொயின் நவாஸ் டி கஸ்கர் கராச்சியில் கிளிப்டன் பகுதியில் உள்ள தனது பங்களாவில் இருந்து வெளியேறிவிட்டார். கராச்சியில் முஸ்லிம் மதகுரு ஆகிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள பள்ளிவாசல் அருகே நிர்வாகம் வழங்கிய குடியிருப்பில் தனியாக தங்கியுள்ளார்.
மன உளைச்சலில் தாவூத்
இவரது மனைவி மற்றும் குழந்தைகளும் இவருடன் இருக்கின்றனர். மகன் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால் தாவுத் இப்ராஹிம் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார். இதனால் அவர் வருத்தமுடன் காணப்படுகிறார் என்று மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிமின் தம்பி இக்பால் கஸ்கர் போலீசில் கூறியுள்ளார்.
தாவூத்தை பிடிக்க முடியாதா?
தாவூத் மன உளைச்சலில் இருப்பதாக கூறும் தம்பிக்கு, அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருக்குமா? அப்படியே தாவூத் இருப்பிடத்தையும் தெரிந்து கொண்டு கைது செய்யலாமே என்று தாவூத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கேட்கின்றனர்.