இந்தியா தேடும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை இதுதான்!
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கராச்சி: மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தாவூத் இப்ராஹிமுக்கு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்ட போதிலும் அரை மணி நேரத்திற்குள் அவரது நிலைமை மிகவும் மோசமடைந்தது.
இதைத் தொடரந்து கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் இரவு 7 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு நிபுணர்கள் கொண்ட மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. எனினும் அவரது நிலை மிகவும் மோசமடைந்ததால் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையை அவரது உடல் நிலை ஏற்கவில்லை.
தாவூத் அனுமதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு உயர் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த மருத்துவமனையில் தாவூத் பல்வேறு பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்ற தாவூத் மிகவும் பலவீனமாக நிலையில் காணப்பட்டார். இதனால் தாவூத் இப்ராஹிம் பிழைக்க வாய்ப்பில்லை. அவர் மரணமடைந்திருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.