உயிருக்காக போராடி வருகிறார் தாவூத் இப்ராஹிம்- கண்காணிக்கும் உளவுத்துறை
பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச குற்றவாளி தாவூத் இப்ராஹிம் உயிருக்காக போராடி வருவதாக தகல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு பின்னர், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானுக்கு தப்பியதற்கான அனைத்து ஆதாரங்கள் உள்ளன. இதை பாகிஸ்தான் அரசு மறத்து வருகிறது.
இந்நிலையில் தாவூத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும் அவர் தற்போது கராச்சியில் உள்ள ஆகா கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், தாவூத் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் நீண்ட நாள்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வருகிறார்.
இதனால் அவரை சமீபத்தில் ஜாவித் மியான்டன் நடத்திய நிகழ்ச்சியில் பார்த்ததாக கூறுவதில் உண்மை இல்லை. தாவூத் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறும் தகவலும் பொய்யானதாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.