மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் இறந்துகிடந்த பெண்: கண்டுகொள்ளாமல் சாப்பிட்ட மக்கள்
ஹாங்காங்: ஹாங்காங்கில் ஆதரவற்ற பெண் ஒருவர் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் இறந்தநிலையில் அமர்ந்திருந்ததை பார்க்காமல் பலரும் பல மணிநேரம் இருந்துள்ளனர்.
ஹாங்காங்கில் உள்ள பிங் ஷெக் மாவட்டத்தில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு ஆதரவற்ற பெண் ஒருவர் சென்றுள்ளார். அவர் உணவகத்தில் உள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தபோது இறந்துவிட்டார். 24 மணிநேரமும் செயல்படும் அந்த உணவகத்தில் அவர் இறந்து டேபிளில் சாய்ந்தபடி இருந்தது தெரியாமல் பலரும் அவரை சுற்றி அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.
அவர் இறந்தபடியே 24 மணிநேரம் அங்கு இருந்துள்ளார். சனிக்கிழமை காலை உணவகத்திற்கு சாப்பிட வந்த பெண் ஒருவர் ஆதரவற்ற பெண் அசையாமல் இருந்ததை பார்த்து அவர் மயங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்தபோது அந்த பெண் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
வீடு இல்லாத அந்த பெண் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் இரவு பொழுதை கழிப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். அந்த பெண்ணிற்கு 50 முதல் 60 வயது வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து ஹாங்காங் மெக்டொனால்ட்ஸ் மூத்த டைரக்டர் வென்டி லாம் கூறுகையில்,
பிங் ஷெக் எஸ்டேட் உணவகத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து எங்களின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். யார் வேண்டுமானாலும் எங்கள் உணவகத்திற்கு எந்த நேரத்திலும் வரலாம் என்றார்.